கீதை உபதேசம் பெறுவதற்கான தகுதி


கீதை உபதேசம் பெறுவதற்கான தகுதி
x
தினத்தந்தி 15 Aug 2017 12:30 AM GMT (Updated: 14 Aug 2017 1:17 PM GMT)

குருஷேத்திரப் போர் தொடங்கும் நேரத்தில், தன் எதிரில் நின்ற உறவுகளைக் கண்டதும் அர்ச்சுனன் போர்புரிய எண்ணம் இல்லாமல் மனம் தடுமாறினான்.

குருஷேத்திரப் போர் தொடங்கும் நேரத்தில், தன் எதிரில் நின்ற உறவுகளைக் கண்டதும் அர்ச்சுனன் போர்புரிய எண்ணம் இல்லாமல் மனம் தடுமாறினான். அவனுக்குள் எழுந்த எண்ணற்ற சந்தேகங்களுக்கு, கிருஷ்ணர் கூறிய விளக்கங்களே ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக உருப்பெற்று விளங்குகிறது. மனிதகுலம் முழுவதற்குமான

மாபெரும் தத்துவச் சுரங்கமாக ‘பகவத் கீதை’ நூல் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர், தனக்கு போதித்த கீதையைப் பற்றியே அர்ச்சுனனுக்கு சந்தேகம் எழுந்தது. அவனது எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்தது. ‘நுட்பமான பல அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல, கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந் தெடுத்தார்? தத்துவ உபதேசங்களுக்குத் தகுதியான, பிதாமகர் பீஷ்மரிடம் ஏன் அதைச் சொல்லவில்லை. ஒரு வேளை பீஷ்மர், எதிர் முகாமில் இருந்ததால் அவரை தவிர்த்திருப்பாரோ?.. ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே! அவரை விட கீதையைக் கேட்க பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? வயதில் மூத்தவராகவும், தரும நீதிகளை உணர்ந்தவராகவும் இருக்கும் தருமனை, ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? பீமன் பலசாலி மட்டுமல்லாது.. மிகச் சிறந்த பக்திமானும் கூட.. இதுபோன்ற நல்லவர்களை எல்லாம் விட்டு விட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டம் உள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்பவனும், ஆத்திரக்காரனுமான என்னை எதற்காக கீதை உபதேசம் கேட்க தகுதி உள்ளவனாக தேர்வு செய்தார்’ என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ச்சுனன்.

தன்னுடைய சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டு விட எண்ணினான். அதன்படி கிருஷ்ணரைச் சந்தித்து தன்னுடைய சந்தேகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்தான்.

அவனது சந்தேகத்தைக் கேட்டதும், கிருஷ்ணர் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால், நான் உனக்கு கீதையை உபதேசம் செய்யவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை, அறங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்களை உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிட முடியாது. அந்த சாஸ்திரங்களை கடைப்பிடிப்பதால் தான் சிறப்பு வந்து சேரும். கவுரவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை அறிந்தும், பீஷ்மர் அவர்கள் பக்கமே சாய்ந் திருந்தார். அதே சமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது, தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறினார். இப்படி ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போடுவது சரியில்லாதது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக யாரிடம் இணைந்திருக் கிறதோ, அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மன், கீதை கேட்கத் தகுதியானவர் என்பதும் உன்னுடைய எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்து விட்டுப் பிறகு வருந்துபவர். தர்மன் நீதியையும், தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால், அவன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தால் அவனால் விளைந்த விபரீதங்களே ஏராளம்.

ஆனால், நீ இவர்களைப் போன்றவன் அல்ல, சிறந்த வீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தைகளைக் கற்றவன் என்றாலும் கூட, நீ முன் சிந்தனை கொண்டவனாக இருக்கிறாய். அதுதான் உன்னுடைய தனிச் சிறப்பு. நீ இப்போது வாதிடுவதில் இருந்தே தெரியவில்லையா? உன்னைவிட வயதிலும், அறிவிலும் பெரியவர்களான பலரை மதித்ததன் காரணமாகவே, நீ என்னிடம் இப்போது கேள்வி களை எழுப்பிக் கொண்டிருக்கிறாய். குருஷேத்திர களத்தில் நின்றபோதும், உற்றார்– உறவினர், மதிப்பிற்குரிய பெரியவர்களை எல்லாம் எப்படிக் கொல்வது?, இந்த யுத்தமும், இழப்பும் தேவைதானா?, அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியை பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கியவன் நீ. பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.

பழைய விரோதங்களுக்கு பழிவாங்க நினைத்திருந்தாலும், களத்தில் புகுந்தபோது, போரே வேண்டாம் என்று எண்ணும் உள்ளம் உன்னிடம் இருந்தது. நீதி எது? அநீதி எது? என்று ஓரளவு சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந் திருக்கிறாய். இதுபோன்ற வி‌ஷயங்கள்தான், உனக்கு நான் கீதையை உபதேசிக்கக் காரணங் கள்.

நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும், தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான், கீதையை கேட்கத் தகுதியுடையவன். இதைத்தவிர நான் உனக்கு எந்த சிறப்புச் சலுகையும் வழங்கவில்லை’ என்றார் கிருஷ்ணர்.

தன்னை கிருஷ்ணர் கீதை கேட்க தேர்வு செய்த விதத்தை எண்ணி மெய்சிலிர்த்த அர்ச்சுனன், அடக்கத்தோடு அவரை வணங்கி நின்றான்.

Next Story