முத்தான வாழ்வு அருளும் குலசை முத்தாரம்மன்


முத்தான வாழ்வு அருளும் குலசை முத்தாரம்மன்
x
தினத்தந்தி 26 Sep 2017 2:30 AM GMT (Updated: 25 Sep 2017 10:13 AM GMT)

சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை பராசக்தி. சக்தி அருள்பாலிக்கும் இடங்கள் சக்தி பீடங்களாகப் புகழ்ந்து போற்றப்படுகின்றன.

30–9–2017 - தசரா  பெருவிழா

க்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை பராசக்தி. சக்தி அருள்பாலிக்கும் இடங்கள் சக்தி பீடங்களாகப் புகழ்ந்து போற்றப்படுகின்றன.

அகிலத்தைப் படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னை பராசக்தி ஒவ்வொரு தலத்திலும் வெவ்வேறு திருநாமங்களில் அருள்பாலிக்கிறாள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. தசரா என்றதும் அனைவருக்கும் மைசூரில் நடக்கும் திருவிழா தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் தசரா குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அப்போது மகிஷாசுரனை, முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்.

அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள்.  தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.

ஞானம் என்றால் பேரறிவு. மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை  சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்ட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

கனவில் தோன்றிய அம்மன்

அகிலம் போற்றும் நாயகி, அன்னை முத்தாரம்மனை திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திரு உளம் கொண்டாள்.

கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில் தோன்றி தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் சிற்பிக்கு காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த சிலையை தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டார். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் ஆட்விக்க குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார். சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்ப படியே அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந்தருளி உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தசரா பெருவிழா

இந்த ஆலயத்தில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றத்துடன் தசரா விழா தொடங்கும். கொடியேற்ற தினத்திற்கு முந்தைய இரவில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாள் துர்க்கை கோலத்தில் அம்மன் காட்சி தருவாள். 2–ம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், 3–ம் நாள் பார்வதி கோலத்திலும், 4–ம் நாள் பாலசுப்        பிரமணியர் கோலத்திலும், 5–ம் நாள் நவநீதகிருஷ்ணன் கோலத்திலும், 6–ம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், 7–ம் நாள் ஆனந்த நடராசராகவும், 8–ம் நாள் அலைமகள் கோலத்திலும், 9–ம் நாள் கலைமகள் கோலத்திலும் வீதி உலா வருவார். 10–வது நாள் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும்.

அங்கு மகிஷாசுர வதம் நடைபெறும். முதலில் மகி‌ஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக்கொடி நாட்டுவாள். இந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12–ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

இந்த ஆலயத்தின் தலமரம் வேம்பு ஆகும். ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். காலை 8.15 மணிக்கு காலை சந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகாலமும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8.15 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் செய்யப்படுகிறது.

வழியும்– தூரமும்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் வந்து, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை வர முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ், கார் மூலம் வந்து சேரலாம்.

–செந்தூர் மாலன்.

பக்தர்கள் வேடம் போடுவது ஏன்?

தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வித, விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து  கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.

திருமஞ்சணை பிரசாத மகிமை

குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

அன்னதானம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் தினமும் மதியம் 1000 பேருக்கு அன்னதான திட்டத்தின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.

குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு உடனே ஊர் திரும்பி விடலாம். பால்குடம் எடுப்பதாக வேண்டி கொண்டவர்கள் முதல் நாள் இரவு கண்டிப்பாக கோவிலில் தங்க வேண்டும்.

மாவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையின்போது தரும் மாவை சாப்பிட்டால் தீராத நோயும், குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் குணமாகி நலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

நோய் தீர்க்கும் வேப்பிலை

குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



காளிவேட மகிமை


குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன், சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர் களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகி‌ஷனை குத்துவார்கள்.

காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீர பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.

Next Story