சிவபெருமானை சோதனை செய்த பார்வதி


சிவபெருமானை சோதனை செய்த பார்வதி
x
தினத்தந்தி 2 Jan 2018 5:17 AM GMT (Updated: 2 Jan 2018 5:17 AM GMT)

உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதனை இங்கேப் பார்க்கலாம்..

9-1-2018 படியளக்கும் திருநாள்

ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக் கும் படியளந்து முடித்துவிட்டீர் களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.

‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.

‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெரு மானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.

தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.

நல்லதை செய்யும் நவக்கிரக துதி

ஒவ்வொரு ஆலயத்திலும் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதிகள் இருக்கின்றன. அந்த சன்னிதியில் இருக்கும் நவக்கிரகங்களின் முன்பாக நின்று, அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மகிழ்ச்சி அடைந்து, துயரில்லாத வாழ்வையும், வளமான வாழ்வையும் வழங்கும். இங்கே ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் உரிய காயத்ரி மந்திரங்களைப் பார்க்கலாம்.

சூரிய காயத்ரி

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி!
தன்னோ ஸுர்ய ப்ரசோதயாத்!’

சந்திரன் காயத்ரி

‘பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரசோதயாத்!’

அங்காரன் காயத்ரி

‘ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோதயாத்’

புதன் காயத்ரி

‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரசோதயாத்’

குரு காயத்ரி

‘ஓம் விருபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்!’

சுக்ரன் காயத்ரி

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்’

சனீஸ்வர காயத்ரி

‘ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்!’

ராகு காயத்ரி

‘ஓம் நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்!’

கேது காயத்ரி

‘ஓம் அச்வத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்!’

அஷ்டமியில் பவனி

தாய், தந்தையின் அம்சமாக கருதப் படுபவர்கள், மதுரை சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும். அவர்கள் உலக மக்களாகிய, தங்களின் பிள்ளைகளுக் கும், சகல ஜீவராசிகளுக்கும் ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி. நாம் எந்த சுப நிகழ்ச்சியையும் அஷ்டமியில் நடத்துவதில்லை. நாம் தான் எதை செய்ய வேண்டுமானாலும் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம். ஆண்டவன் அதை யெல்லாம் பார்ப்பதில்லை. அவனுக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்களே. இறை வன் தன்னால் படைக்கப்பட்ட ஜீவராசி களுக்கு, கொடுப்பதை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டவன். அதற்காகவே, உலக மக்களைச் சந்திக்க வருகிறான்.

மரத்தில் கட்டப்படும் உணவு

பசி ஒரு கொடிய வியாதி. பாவி களுக்குக் கூட அந்த நோய் வந்துவிடக் கூடாது என்பதில், நமது முன்னோர்கள் அக்கறையாக இருந்துள்ளனர். அதற்கு கேரளாவில் உள்ள செருக்குன்னம் அன்னபூரணி கோவிலே உதாரணம். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெறும். அது தவிர இரவானதும், ஒரு துணியில் அன்னத்தை வைத்து மரத்தில் கட்டி தொங்க விடுவார்களாம். இரவில், அந்தப் பக்கம் நடமாடுபவர்கள், நல்லவர் கள், கெட்டவர்கள் என யாராக இருந் தாலும், அந்த உணவு அவர்களின் பசியை ஆற்றட்டும் என்பதே இதற்குக் காரணமாம்.

பசி போக்கும் கோலம்

மார்கழி அஷ்டமியன்று மீனாட்சியம் மன் கோவில் ஆடிவீதியில், மாவுக்கோலம் போடும் வழக்கம் இருக்கிறது. இதை நேர்ச்சையாகவே பலர் செய்கின்றனர். மிகுந்த வறுமையிலுள்ளவர்கள் இந்த நேர்த்திக்கடனை செய்வது வழக்கம். இந்த மாவை அங்குள்ள எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகள் உண்ணும். இந்த எளிய தர்மத் திற்கு மகிழும் இறைவன், அவர்களது பசியைப் போக்குவதாக ஐதீகம்.

Next Story