வீடு-மனை மறு விற்பனையின்போது கவனிக்க வேண்டியவை


வீடு-மனை மறு விற்பனையின்போது கவனிக்க வேண்டியவை
x
தினத்தந்தி 22 April 2017 6:32 AM GMT (Updated: 22 April 2017 6:31 AM GMT)

வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை விற்கும் தருணங்களில் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்ற தகவல்களை ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நகர வாழ்க்கையில், பல்வேறு காரணங்களுக்காக வீடு, மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பு விற்கப்படும் சூழல் ஏற்படலாம். குடும்ப நலன் கருதி தற்போது உள்ள அளவை விடவும் பெரிய வீடு வாங்கும் முடிவாக அது இருக்கலாம் அல்லது தொழில் அல்லது பணியிட மாற்றங்கள் காரணமாக விற்பனை செய்யக்கூடிய சூழல் இருக்கலாம். அவ்வாறு வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை விற்கும் தருணங்களில் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்ற தகவல்களை ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றில் உள்ள முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.

•மனை அல்லது வீட்டிற்கான மதிப்பீடு என்ன என்பதை தக்க என்ஜினீயர் மூலமாக மதிப்பீடு செய்து வைத்திருக்க வேண்டும். மேலும், ஒரு வழக்கறிஞரின் ‘லீகல் ஒப்பீனியன்’ இருப்பதும் வாங்குபவர்களது கவனத்தில் கொள்ளப்பட்டு, விரைவான விற்பனைக்கு சாதகமாக இருக்கும்.

•வீட்டில் உள்ள அனைத்து கதவுகள், ஜன்னல்கள், கப்போர்டுகள் மற்றும் புளோர் போன்றவை முடிந்த வரையில் கண் கவரும் வகையில் இருப்பது முக்கியம். பளபளப்பான தலைவாசல் மற்றும் மற்ற கதவுகள், பளிச்சென்ற தோற்றத்தில் ஜன்னல் திரைகள், டச்-வுட் பெயிண்ட் பூசப்பட்ட பர்னிச்சர்கள், பாலிஷ் போடப்பட்ட தரைத்தளம் என்று கலக்கலாக வீட்டை மாற்ற கொஞ்சம் செலவானாலும், வேலை எளிதாக முடியும் என்பது நிபுணர்களின் கருத்து.

•வீடு அல்லது மனைக்கான மின்சார கட்டணங்கள், சொத்து மற்றும் குடிநீர் வரி போன்ற அடிப்படையான கட்டணங்களை நடப்பு மாதம் வரையில் செலுத்தி, அதன் ரசீதுகளை கையில் வைத்திருப்பது, வீடு வாங்குபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இருக்கும்.

•வீடு அல்லது மனை விற்கும் முடிவை எடுத்த பின்பு, அன்றைய தேதி வரையிலான வில்லங்க சான்றிதழ் கைவசமாக இருப்பது நல்லது. மேலும் வில்லங்க சான்றிதழை தற்போது ‘ஆன்-லைன்’ மூலமாகவும் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

•மனை அல்லது வீட்டுக்கு கச்சிதமான தனிப்பட்டா இருந்தால் வாங்குபவர்கள் மனதில் அது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவதாக கவனிக்கப்பட்டுள்ளது. மூலப்பத்திரம் உள்ளிட்ட இதர ஆவணங்கள் சரியாக இருந்தாலும், வீடு விற்பனையில் பட்டா விஷயம் அவசியமானது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

•காலி மனையாக இருந்து அதை விற்கவேண்டிய சூழல் இருந்தால், முதலில் மனையின் தோற்றம் பார்வைக்கு தெளிவாக இருக்கவேண்டும். மனையில் முள் செடிகள், புதர் போன்றவை வளர்ந்திருந்தால் அவற்றை முற்றிலும் அகற்ற வேண்டியது அவசியம்.

• வெளிப்புற சாலையை ஒப்பிடும்போது மனை பள்ளமாக இருக்கும்பட்சத்தில், நல்ல மண்ணை சாலை மட்டத்துக்கு ஏற்ப கச்சிதமாக நிரப்பி உயர்த்துவது அவசியமானது. மேலும், மனையில் ஏதாவது பள்ளமான பகுதிகள் இருந்தால் அதில் மண்ணை சீராக நிரப்பி மனையை சம தளப்பரப்பாக காட்டுவது நல்லது.

•மனையின் நான்கு பக்க எல்லை கற்களை கச்சிதமாக அமைத்து, பெயிண்ட் அடித்து, மனையின் எண்ணை எழுதி வைத்திருப்பது கண்ணை கவருவதாக இருக்கும்.

•வீடு, மனை விற்பனையின்போது எந்த விஷயத்தையும் தக்க ‘அக்ரிமென்ட்’ மூலம் எழுத்துப்பூர்வ ஆதாரத்தோடுதான் செய்ய வேண்டும். பணத்திற்கான ரசீதுகள் தக்க ஸ்டாம்ப் பேப்பர் மூலம் எழுதப்படுவதோடு, இயன்றவரையில் பணப்பரிமாற்றத்தை காசோலை அல்லது ‘ஆல்-லைன்’ பரிவர்த்தனை மூலம் செய்வது நல்லது. 

Next Story