நில உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய புலப்படம்


நில உரிமையாளர்கள் கவனிக்க  வேண்டிய புலப்படம்
x
தினத்தந்தி 18 Aug 2017 11:15 PM GMT (Updated: 18 Aug 2017 1:56 PM GMT)

வீடு, வீட்டு மனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான சட்ட ரீதியான பதிவேடுகள் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் எப்.எம்.பி என்ற புலப்படம் ஆகியவை ஆகும்.

வீடு, வீட்டு மனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான சட்ட ரீதியான பதிவேடுகள் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் எப்.எம்.பி என்ற புலப்படம் ஆகியவை ஆகும். இவற்றில் F.M.B (Field Measurement Book) என்ற புலப்படம் என்பது குறிப்பிட்ட இடம் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள அடையாளங்களை படமாக குறிப்பிடுவதாகும். அதாவது, நிலத்தின் உரிமையாளருக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் எல்லைகளுக்குள் அமைந்த கிணறுகள், குடிசைகள், சிறுவகை கட்டிடங்கள், வீடுகள் மற்றும் வண்டிப்பாதைகள் போன்ற அடையாளங்களை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட சர்வேயர் ஆகியோர் மூலம் அளவீடு செய்து உரிய புலப்படமாக பதிவு செய்து, ஆவணங்களாக வைக்கப்படுவதாகும்.

வருவாய்த்துறை ஆவணம்

நிலத்தின் உரிமையாளரது அனுபவ எல்லைகளின்படி, அளவுகள் எடுக்கப்பட்ட பகுதிகள் முறையாக நிலத்தின் வரைபடமாக தயாரிக்கப்பட்டு வருவாய் துறையினரால் எப்.எம்.பி பராமரிக்கப்படும். அந்த வரைபடத்தில், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள நன்செய், புன்செய், தரிசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் (நத்தம் சர்வே) என்று நிலத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்றவாறும், கிராமத்தின் ஒட்டு மொத்த பரப்பளவிற்கு ஏற்றவாறும் புல எண்கள் குறிப்பிடப்பட்டு, மாவட்ட வருவாய்த்துறை ஆவணமாக வைக்கப்படும்.

புலப்பட நகல்கள்

மேற்கண்டவாறு நில அளவை பணிகள் முடித்து, வரைபடமாக தயாரிக்கப்பட்டு, வருவாய் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒரு நகல், தாசில்தார் அலுவலகமான வட்ட நிர்வாகத்திடம் ஒரு நகல், மாவட்ட நிர்வாகத்திடம் (மாவட்ட வருவாய் அலுவலர்) ஒரு நகல், மைய நில அளவை அலுவலகத்தில் ஒரு நகல் என்று அனைத்து அலுவலகங்களிலும் பதிவுகள் இருப்பதோடு, அளவை செய்யப்பட்ட ஒரிஜினல் எனப்படும் மூல ஆவணமானது மாநில நில அளவை ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

பட விளக்கம்


புலப்படத்தின் மேல் பகுதியில் மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், வருவாய் வட்டத்தில் எந்த வரிசை எண், வருவாய் கிராமத்தின் பெயர், அந்த புல எண்ணின் மொத்தப் பரப்பு, படத்தின் கீழ் படம் எந்த அளவு திட்டத்தில் வரைவு செய்யப்பட்டுள்ளது, என்ற விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். புல எண்ணின் பக்க புல எண்கள் எழுதப்பட்டு அடிக்கோடுகள் இடப்பட்டிருக்கும். புலப்படத்தில் நிலத்தின் உரிமையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அனைவரது பெயரும், அவர்களுக்குரிய உட்பிரிவு எண்களோடு குறிக்கப்பட்டிருக்கும்.

சர்வே கற்கள் பாதுகாப்பு

நிலத்தின் அனைத்து எல்லைகள், அவற்றில் உள்ள வளைவுகளுக்கு நடப்பட்டுள்ள சர்வே கற்கள் பாதுகாப்பது, சீர்படுத்துவது, அவ்வப்போது அவற்றை புதுப்பிப்பது ஆகியவை சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கான கடமைகளாக தமிழ்நாடு நில அளவை எல்லைகள் குறித்த சட்டம் 1923, பிரிவு 8–ல் சொல்லப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தின்படி ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Next Story