வீட்டு கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்


வீட்டு கடன்  பெறுபவர்கள் கவனிக்க  வேண்டிய  10  அம்சங்கள்
x
தினத்தந்தி 22 Sep 2017 10:30 PM GMT (Updated: 22 Sep 2017 11:15 AM GMT)

இன்றைய சூழ்நிலையில் அரசுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களை வழங்க தயாராக உள்ளன.

ன்றைய சூழ்நிலையில் அரசுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களை வழங்க தயாராக உள்ளன. வீட்டு கடன் பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கியமான வி‌ஷயங்கள் பற்றி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை:

1) வங்கி அல்லது நிதி நிறுவனம்

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் என்று பல அமைப்புகள் வீட்டு கடன் வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற பலமுறைகள் அங்கே செல்ல வேண்டும் என்ற நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டுக்கே வந்து கடனுக்கான ஏற்பாடுகளை செய்வதும் உண்டு. பொதுவாக, தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விட பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்களில் வட்டி சற்று குறைவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

2) கடனுக்கான வட்டி

நிலையான (பிக்ஸ்டு) வட்டி, மாறுபடும் (புளோட்டிங்) வட்டி என இரு விதமான வட்டி விகிதங்கள் வீட்டு கடனுக்கு கணக்கிடப்படுகின்றன. நிலையான வட்டியை 3 அல்லது 5 வருடங்களுக்கு பிறகு புளோட்டிங் வட்டி முறைக்கு மாற்றம் செய்து கொள்ளவும் இயலும்.

கடன் பெறுபவரின் சிபில் ரேட்டிங் அதிக ஸ்கோர்கள் பெற்றிருந்தால், வட்டி விகிதத்தில் குறைக்க சொல்லி வங்கியில் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், வட்டி கணக்கிடும் முறையானது கடன் தொகை குறைவதற்கேற்ப கணக்கிடுவது, ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடுவது என இரண்டு வகையாக உள்ளது. அவற்றில் மாதத்தவணை குறைவாக உள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தேர்வு செய்யலாம்.

3) மார்ஜின் மணி

வீடு அல்லது மனைக்கான ஒட்டு மொத்த தொகையும் கடனாக நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தருவதில்லை. அதனால், சுமாராக வீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவிகித தொகையை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். அதனால், கடன் தொகையை குறைத்து சிறிய வீடாக வாங்கலாம். பொதுவாக, வீட்டு கடனுக்கான மாத தவணை ஒருவரது மாதச் வருமானத்தில் 45 சதவிகிதத்துக்கும் மேற்படாமல் இருப்பது நல்லது.

4) பல்வேறு கட்டணங்கள்

வீட்டு கடன் பெறும்போது, அதற்கான பரிசீலனை கட்டணம், ஆவண கட்டணம், பில்டிங் வேல்யூவே‌ஷன், லீகல் ஒப்பீனியன் ஆகிய கட்டணங்கள் வங்கிகள் அல்லதி நிதி நிறுவனங்களை பொறுத்து பெறப்படுகின்றன. ஒட்டு மொத்த கட்டணங்கள் குறைவாக உள்ள நிறுவனத்தை கவனத்தில் கொண்டு கடன் பெறலாம்.

5) வீட்டு கடன் ஒப்புதல்

பொதுவாக, வீட்டு கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா..? அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா..? (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்று கவனிக்க வேண்டும். கிளை அலுவலகம் கடன் வழங்கும் பட்சத்தில் கடன் விரைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியின் மத்திய பரிசீலனை மையம் வீட்டு கடவை வழங்கும் பட்சத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்து கால தாமதம் ஆகும். இந்த அடிப்படையை மனதில் கொள்ளலாம்.

6) கடன் தொகைக்கான காசோலை

வீட்டு கடனுக்கான காசோலையை வீடு கட்டும் கான்ட்ராக்டர் அல்லது கட்டுனருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் வழங்கும்போது அந்த தகவல் கடன் பெற்றவருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்வது முக்கியம்.

7) தவணை காலம்

நீண்ட கால தவணையில் கடனை திருப்பி செலுத்தும்போது மாத தவணை குறைவாகவும், குறுகிய கால தவணைக்கு வட்டி தொகை குறைவாகவும் இருக்கும். அதாவது, தவணைக்காலம் அதிகரிக்கும்போது செலுத்தப்படும் வட்டி அதிகரிக்கும். அதன் அடிப்படையில் வருங்காலங்களில் தவணையை அதிகரித்து வட்டியை மிச்சப்படுத்தலாம்.

8) கடன் தொகை

அஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் என்று பல்வேறு நிலைகளில் கடன் தொகை அளிக்கப்படுவது வழக்கம். கட்டப்படும் வீட்டின் நிலைக்கேற்ப வங்கி மேலாளர்களே கடன் தொகையை வழங்குவதும் உண்டு. அல்லது வங்கிக்கான எஞ்சினியர் ஒப்புதல் தந்த பிறகு கடன் தொகை தரப்படுவதும் உண்டு. வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் மேற்கண்ட நடைமுறைகளை தெளிவுபடுத்திக்கொண்டு செயல்படுவது நல்லது.

9) மாரடோரியம் பீரியடு

பொதுவாக, வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைய சுமாராக 18 மாதங்கள் ஆகலாம். அந்த காலகட்டத்தில் வீட்டு கடன் 3 அல்லது 4 பிரிவுகளாக வழங்கப்பட்டிருக்கும். அந்த தொகைகளுக்கான பிரீ இ.எம்.ஐ மற்றும் வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி விடுவது அவசியம்.

10) கட்டுமான நிறுவனம்

கட்டுமான பணிகளை செய்யும் கான்ட்ராக்டர் அல்லது பில்டிங் புரமோட்டர் ஆகியோர்களை தேர்ந்தெடுப்பது முக்கியமான அம்சமாகும். இந்த வி‌ஷயத்தில் அவர்களது முந்தைய புராஜெக்ட் பற்றி விசாரித்து அறிந்து கொண்டு தேர்வு செய்யலாம்.

Next Story