இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆடமாட்டார்


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆடமாட்டார்
x
தினத்தந்தி 24 July 2017 11:00 PM GMT (Updated: 24 July 2017 7:44 PM GMT)

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

காலே,

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் லோகேஷ் ராகுல் விளையாடமாட்டார் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. லோகேஷ் ராகுல் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்கள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் தினேஷ் சன்டிமால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மலின்டா புஷ்பகுமரா அறிமுக வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார். இலங்கை அணி வருமாறு:– ரங்கனா ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணரத்னே, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குணரத்னே, டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, குணதிலகா, தில்ருவன் பெரேரா, சுரங்கா லக்மல், லஹிரு குமரா, பெர்னாண்டோ, மலின்டா புஷ்பகுமரா, நுவான் பிரதீப்.


Next Story