பயிற்சி ஒருநாள் போட்டியில் 347 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா கட்டுபடுத்திய வாஷிங்டன் சுந்தர்


பயிற்சி ஒருநாள் போட்டியில் 347 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா கட்டுபடுத்திய வாஷிங்டன் சுந்தர்
x

பயிற்சி ஒருநாள் போட்டியில் 347 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி கட்டுபடுத்திய வாஷிங்டன் சுந்தர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி , 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிகள் மோதும் ஒரு நாள் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் சென்னையில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.

பிசிசிஐ தலைவர் அணி சார்பில் 8 பேர் பந்துவீசினார்கள். ஐபிஎல்-லில் கவனம் பெற்ற சந்தீப் சர்மா, இந்திய அணியில் தேர்வான குர்கீரத் மன் ஆகியோரும் அதில் உள்ளனர். 8 பேரில் 6 பேரின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்தார்கள். கர்னேஸ்வர், கேடி படேல் ஆகியோர் சராசரியாக ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்தார்கள். சந்தீப் சர்மா, குர்கீரத், குல்வந்த் ஆகியோர் 7 ரன்களுக்கு மேல். எகானமி ரேட் 6 ரன்களுக்குள் இருந்தது இருவருக்குத்தான். இருவரும் தமிழக வீரர்கள். வாஷிங்டன் சுந்தர்,  ரஹில் ஷா.

7 ஓவர்கள் வீசி 32 ரன்கள் மட்டும் கொடுத்தார் ரஹில் ஷா. ஆனால் அவரால் விக்கெட் எதுவும் எடுக்கமுடியவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களில் அசத்தியவர் வாஷிங்டன் சுந்தர்தான். 8 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய  கேப்டன் சுமித் மற்றும் மேக்ஸ்வெல் என இரு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பைத் தன்னால் முடிந்தளவுக்கு கட்டுப்படுத்தினார். பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்திலும் தன்னால் ரன்களைக் கட்டுப்படுத்தமுடியும் என்று வாஷிங்டன் நிரூபித்த மற்றொரு போட்டி இது.

ஐபிஎல், டிஎன்பில்-லில் மட்டுமல்ல சர்வதேச அணிக்கு எதிராகவும் தன்னால் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்பதை இந்தப் போட்டியின் மூலம் நிரூபித்துள்ளார்  வாஷிங்டன் சுந்தர்.

சமீபத்தில் முடிந்த ஐபிஎல்-லில் சிறந்த சுழற்பந்துவீச்சாளராகவும் டிஎன்பிஎல்-லில் சிறந்த ஆல்ரவுண்டராகவும் விளங்கினார். இதையடுத்து இன்றைய போட்டியின் மூலம் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லவுள்ளார்.

 டிஎன்பிஎல்-லில் விளையாடிய சுந்தர் அவருடைய பேட்டிங் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்தது. 9 போட்டிகளில் 459 ரன்கள் குவித்தார். சதமடித்தது மட்டுமல்லாமல் 15 பந்துகளில் அரை சதம் எடுத்தும் கவனம் ஈர்த்தார். அதேபோல 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி (எகானமி - 6.16) தன்னை ஒரு ஆல்ரவுண்டர் என அழுத்தம்திருத்தமாக நிரூபித்தார்.  

பாண்டியா போல இந்திய ஒருநாள் அணிக்கு மற்றொரு ஆல்ரவுண்டர் அவசியம். அந்த இடத்துக்குத் தகுதியானவராக உள்ளார் வாஷிங்டன் சுந்தர். இந்த இளைஞன், இந்திய அணியில் எப்படி, எவ்வளவு சீக்கிரம் இடம்பிடிக்கப் போகிறார் என்பதே அடுத்தக்கட்ட சுவாரசியமாக இருக்கப் போகிறது.

Next Story