ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை-விராட்கோலி


ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை-விராட்கோலி
x
தினத்தந்தி 21 Oct 2017 9:30 PM GMT (Updated: 21 Oct 2017 8:33 PM GMT)

ரஹானேவை மிடில் வரிசையில் இறக்க விரும்பவில்லை என விராட்கோலி கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஹானே நிச்சயமாக 3-வது தொடக்க ஆட்டக்காரருக்கான வாய்ப்பை பெறுவார். லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரருக்கான போட்டியில் இருக்கிறார். இருப்பினும் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்படுவதால் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை அவர் பெறுவார். ஒரு இடத்துக்கு 4 வீரர்கள் இருப்பது அணிக்கு சிறப்பான விஷயமாகும். ஆனால் ஆடும் லெவனில் 2 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது. ரஹானேவை மிடில் வரிசையில் இறக்கி குழப்பம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களில் யாருக்காவது காயம் அல்லது நல்ல பார்ம் இல்லாதபட்சத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த போட்டி தொடரில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் ஆடிய அனுபவம் கொண்டவர். அணியில் வீரர்கள் கலவை நன்றாக அமைய வேண்டியது அவசியமானதாகும். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை வைத்து வீரர்களுக்கு அணியில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சிறப்பான பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக குறுகிய ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story