இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி


இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Oct 2017 10:30 PM GMT (Updated: 22 Oct 2017 8:22 PM GMT)

டாம் லாதம், ராஸ் டெய்லர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாம் லாதம், ராஸ் டெய்லர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் சதம் வீணானது.

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகல்- இரவு ஆட்டமாக நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஒவரிலேயே ஷிகர் தவான் பவுண்டரிக்கு பந்தை விரட்டினார். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிலைத்து நிற்கவில்லை.

4-வது ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய 2-வது பந்தை ஷிகர் தவான் திருப்பி விட்டு ரன் சேர்க்க முயற்சித்தார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டாம் லாதம் கையில் அடைக்கலமானது. இதனால் ஷிகர் தவான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அந்த ஓவரை டிரென்ட் பவுல்ட் மெய்டனாக வீசி முடித்தார்.

அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார். 5-வது ஓவரில் டிம் சவுதி பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா (20 ரன்) அடுத்த ஓவரில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து விராட்கோலியுடன் இணைந்த கேதர் ஜாதவ் (12 ரன், 25 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களம் கண்ட தினேஷ் கார்த்திக் 37 ரன்னும் (47 பந்துகளில் 4 பவுண்டரியுடன்), டோனி 25 ரன்னும் (42 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) சேர்த்து ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட்கோலி பொறுப்புடன் அடித்து ஆடி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தி ரசிகர்களுக்கு விருந்து அளித்தார்.

நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதத்தை எட்டினார். 200-வது ஒருநாள் போட்டியில் ஆடிய விராட்கோலி அடித்த 31-வது சதம் இதுவாகும். அடித்து ஆடிய ஹர்திக் பாண்ட்யா (16 ரன், 16 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) டிரென்ட் பவுல்ட் வீசிய பந்தை அடித்து ஆட, அது மேல்நோக்கி எழும்பி கனே வில்லியம்சன் கையில் சிக்கியது.

கடைசி ஓவரில் டிம் சவுதி வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்திய விராட்கோலி அடுத்த பந்தை அடித்து ஆட அந்த பந்து பவுண்டரி எல்லையில் நின்ற டிரென்ட் பவுல்ட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோலி 125 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் (26 ரன்கள், 15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) கடைசி பந்தில் ஹென்றி நிகோல்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், டிம் சவுதி 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 80 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 ரன்னிலும் (35 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் கனே வில்லியம்சன் 6 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 32 ரன்னிலும் (48 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு டாம் லாதம், ராஸ் டெய்லருடன் இணைந்தார். இந்த இணை நங்கூரம் பாய்த்தது போல் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. டாம் லாதம் 95 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். அவர் அடித்த 4-வது சதம் இது. கடைசி ஓவரில் ராஸ் டெய்லர் (95 ரன்கள், 100 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர்-டாம் லாதம் ஜோடி 200 ரன்கள் சேர்த்தது.

49 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 102 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 103 ரன்னும், ஹென்றி நிகோல்ஸ் ஒரு பந்தில் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து வீரர் டாம் லாதம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புனேயில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.

Next Story