‘‘எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்’’ இந்திய விக்கெட் கீப்பர் சஹா பேட்டி


‘‘எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்’’ இந்திய விக்கெட் கீப்பர் சஹா பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2017 9:30 PM GMT (Updated: 22 Nov 2017 7:36 PM GMT)

எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்று இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர் சஹா கூறியுள்ளார்.

நாக்பூர்,

எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்று இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர் சஹா கூறியுள்ளார்.

சஹா பேட்டி

இந்தியா – இலங்கை அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது. 2–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தொடக்க டெஸ்டில் முதலாவது இன்னிங்சில் 7–வது வரிசையில் இறங்கி 29 ரன்னும், 2–வது இன்னிங்சில் 8–வது வரிசையில் களம் கண்டு 5 ரன்னும் எடுத்த சஹா கூறியதாவது:–

கொல்கத்தா டெஸ்டில் முதலாவது இன்னிங்சில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி எங்களது பேட்டிங் அமையவில்லை. ஆனால் 2–வது இன்னிங்சில் சரிவில் இருந்து மீண்டு வந்தோம். ஷிகர் தவானும் (94 ரன்), லோகேஷ் ராகுலும் (79 ரன்) அருமையான தொடக்கம் தந்தனர். கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார். இதே போல் இலங்கையின் 2–வது இன்னிங்சில், சீக்கிரமாகவே 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களது நம்பிக்கையையும், மனஉறுதியையும் அதிகப்படுத்தியது. அது மட்டுமின்றி அந்த டெஸ்டில் வெற்றியையும் நாங்கள் நெருங்கினோம். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருந்திருப்போம்.

பேட்டிங் வரிசை

முதலாவது டெஸ்டில் எனது பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. ஒவ்வொரு போட்டியிலும் நான் 7–வது வரிசையில் பேட் செய்வது கிடையாது. சில நேரம் 6–வது வரிசையில் ஆடுகிறேன். அப்போது அஸ்வின் எனக்கு பிறகு வருகிறார். ஜடேஜா கூட சில நேரம் 6–வது வரிசைக்கு அனுப்பப்படுகிறார். எங்கள் மூன்று பேரில் சுழற்சி அடிப்படையில் இந்த வரிசையில் விளையாடுகிறோம். சூழ்நிலைக்கு தக்கபடி அணி நிர்வாகம் இதை முடிவு செய்கிறது. எந்த வரிசையில் ஆடுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாக்பூர் ஆடுகளத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. அது மூடப்பட்டு இருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதோ அல்லது சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததோ எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் சிறப்பான தொடக்கம் காண முயற்சிப்போம்.

தென்ஆப்பிரிக்க தொடர்

அடுத்து வரும் தென்ஆப்பிரிக்க தொடர் குறித்த சிந்தனை எங்களது மனதில் எழாமல் இல்லை. ஆனாலும் இப்போது இங்கு வெற்றி பெற்று, அதன் மூலம் கிடைக்கும் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்வதை எதிர்நோக்கி இருக்கிறோம். நான் எப்போதும் ஒவ்வொரு ஆட்டமாக நம்மை தயார்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவன்.

இவ்வாறு சஹா கூறினார்.


Next Story