வீராட் கோலி- அனுஷ்கா திருமணம், மனைவிக்காக மும்பையில் குடியேறும் கோலி


வீராட் கோலி- அனுஷ்கா திருமணம், மனைவிக்காக மும்பையில் குடியேறும் கோலி
x
தினத்தந்தி 12 Dec 2017 6:46 AM GMT (Updated: 12 Dec 2017 7:59 AM GMT)

திரைப்படங்களில் நடிக்க வசதியாக அனுஷ்கா ஷர்மா மும்பையில் தங்கியிருக்க வேண்டும் என்பதால், டெல்லியிலிருந்து விராட் கோலியும் மும்பையில் குடியேற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மிலன்

இந்திய கிரிக்கெட் அணி யின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவிஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்த போது காதல் ஏற்பட்டது. முதலில்  மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது.

4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.  இதற்காக வீராட்கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம்  இத்தாலியில் நடைபெறும் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் எந்த தேதியில் திருமணம் என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் வீராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டுஸ்கேனி சொகுசு விடுதி யில் நேற்று நடந்தது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்  மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த தகவலை அனுஷ்கா சர்மா டுவிட்டரில் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறும் போது  “நாங்கள் இருவரும் என்னென்றும் அன்புடன் இருப்போம் என உறுதி எடுத்துள்ளோம். இந்த அழகான நாள் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பி களின் வாழ்த்துக்களால் மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது. எங்களது வாழ்க்கை பயணத்தில் முக்கிய அங்கமாக திகழும் ரசிகர்களுக்கு நன்றி” என்று  தெரிவித்தார்.
இதேபோல வீராட்கோலி யும் டுவிட்டரில்  தனது திருமணத்தை தெரிவித்து உள்ளார்.

வீராட்கோலி அனுஷ்கா திருமணத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பாலிவுட்  நட்சத்திரங் களான  அமிதாப்பச்சன், ஷாருக்கான்,  அனில்கபூர்,  ஷாகித்கபூர், அபிஷேக்பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, பிரினிதி சோப்ரா, நேகா துபியா உள்ளிட்ட  இந்தி நடிகர்-நடிகைகள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளளர்.

கோலி-அனுஷ்கா திருமண வரவேற்பு இரண்டு இடங்களில் நடக் கிறது. வருகிற 21-ந்தேதி டெல்லியிலும், 26-ந்தேதி மும்பையிலும்  திருமண வரவேற்பு மற்றும்  விருந்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.

உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21-ம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26-ம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பின்பும் அனுஷ்கா சர்மா பாலிவுட்டில் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. திரைப்படங்களில் நடிக்க வசதியாக அனுஷ்கா சர்மா மும்பையில் தங்கியிருக்க வேண்டும் என்பதால், டெல்லியிலிருந்து விராட் கோலியும் மும்பையில் குடியேற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையின் ஒர்லி பகுதியில் உள்ள புதிய வீட்டில் விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் குடியேற இருப்பதாகத் தெரிகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வரும் ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்தப் பயணத்தின்போது, விராட் கோலியுடன் தென்னாப்பிரிக்கா செல்லும் அனுஷ்கா ஷர்மா, அவருடன் புத்தாண்டைக் கழித்துவிட்டு ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.  



Next Story