2026-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு


2026-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2017 10:00 PM GMT (Updated: 10 Jan 2017 8:54 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது 32 நாடுகள் பங்கேற்று வருகின்றன. இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அப்போது தான் இன்னும் பல குட்டி நாடுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஜூரிச்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது 32 நாடுகள் பங்கேற்று வருகின்றன. இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அப்போது தான் இன்னும் பல குட்டி நாடுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த கோரிக்கை இப்போது ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி 2026-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் கூடுதலாக 16 நாடுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 48 அணிகள் விளையாட உள்ளன. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நேற்று நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. நிதி முறைகேட்டில் சிக்கி செப் பிளாட்டர் பதவி இழந்த பிறகு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட கியானி இன்பான்டினோ, உலக கோப்பை அணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டு மேலும் வளர்ச்சி அடையும் என்று இன்பான்டினோ குறிப்பிட்டார். 1998-ம்ஆண்டு பிரான்சில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அணிகளின் எண்ணிக்கை 24-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு உலக கோப்பை போட்டி அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்.

48 அணிகள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். லீக் முடிவில் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு தற்போது 13 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அது 16 ஆக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதே போல் ஆசிய கண்டத்துக்குரிய அணிகளின் எண்ணிக்கையும் உயரக்கூடும். ஆனால் இந்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதே போல் ஒட்டுமொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 64-ல் இருந்து 80 ஆக உயரும். இதன் மூலம் ஒளிபரப்பு உரிமம் கட்டணம், ஸ்பான்சர்ஷிப், டிக்கெட் விற்பனை உள்ளிட்ட வகையில் ஏறக்குறைய ரூ.6,800 கோடி கூடுதல் வருவாயாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story