தேசிய சாம்பியன்ஷிப்பை புறக்கணித்ததால் அதிரடி: ஆசிய நடைபந்தய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குஷ்பிர் நீக்கம்


தேசிய சாம்பியன்ஷிப்பை புறக்கணித்ததால் அதிரடி: ஆசிய நடைபந்தய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குஷ்பிர் நீக்கம்
x
தினத்தந்தி 18 Feb 2017 9:30 PM GMT (Updated: 18 Feb 2017 9:23 PM GMT)

தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்த இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர், ஆசிய போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை புறக்கணித்த இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர், ஆசிய போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குஷ்பிர் கவுர்

தேசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. தேசிய சாதனையாளரும், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவருமான நட்சத்திர வீராங்கனை 23 வயதான குஷ்பிர் கவுர் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து வீரர், வீராங்கனைகளும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய தடகள சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.

போட்டியில் களம் காணுவோர் பட்டியலில் குஷ்பிர் கவுரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் போட்டிக்கு அவர் வரவில்லை. முன்கூட்டியே தகவலும் தெரிவிக்கவில்லை. இதே போல் மற்றொரு இந்திய முன்னணி வீரர் மனிஷ் சிங் ரவாத்தும் கடைசி நேரத்தில் புறக்கணித்து விட்டார்.

ஆசிய போட்டியில் இடமில்லை

இந்திய தடகள சம்மேளனத்தின் உத்தரவை மீறியதால், மார்ச் 20–ந்தேதி ஜப்பானில் நடக்கும் ஆசிய நடைபந்தய சாம்பியன்ஷிப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இது போன்ற தவறை மீண்டும் செய்தால் தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய தடகள சம்மேளனத்தின் தேர்வு கமிட்டி சேர்மன் குர்பச்சன் சிங் ரந்தாவா கூறும் போது, ‘இன்றைய (நேற்று)தேசிய போட்டியில் பங்கேற்காத எந்த ஒரு வீரர், வீராங்கனைகளும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாக வேண்டும் என்று விரும்பினால், தேசிய போட்டியில் கலந்து கொள்ளுங்கள் என்று வீரர்களிடம் தெளிவாக கூறியிருந்தோம். இந்த வி‌ஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வோம். இவர்களை தேசிய பயிற்சி முகாமில் இருந்து நீக்கும்படி இந்திய தடகள சம்மேளனத்திற்கு பரிந்துரை செய்வேன். அவர்கள் இது போன்று நடந்து கொள்ள முடியாது. அதே சமயம் போட்டியில் பங்கேற்காததற்கு அவர்களது பயிற்சியாளர் சொல்லும் காரணத்தையும் கவனத்தில் கொள்வோம்’ என்றார்.

விரைவில் புதிய பயிற்சியாளர்

இந்திய நடை பந்தய பயிற்சியாளர் ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஆர்ட்சிபாசெவ், காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தை காட்டி ஏற்கனவே குஷ்பிரை தேசிய போட்டியில் பங்கேற்க விடாமல் தடுத்து இருக்கிறார். இதனால் அலெக்சாண்டர் மீது இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் எரிச்சலில் உள்ளனர். ‘ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு அலெக்சாண்டர் இந்த பொறுப்பில் தொடரமாட்டார். அடுத்த பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவில் இருந்து வருவார். புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான எழுத்துபூர்வமான பணிகள் எல்லாவற்றையும் இந்திய விளையாட்டு ஆணையம் முடித்து விட்டது. ஏப்ரல் மாதத்திற்குள் புதிய பயிற்சியாளர் அணியில் இணைவார்’ என்று தடகள சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


Next Story