துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 20 Jan 2018 9:00 PM GMT (Updated: 20 Jan 2018 8:31 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் ஐ.பி.எல். போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் ஐ.பி.எல். போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ‘இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும் யுவராஜ்சிங் இன்னும் வியப்புக்குரிய வீரர் தான். அவரிடம் திறமை இன்னும் அப்படியே இருக்கிறது. அவரை போன்ற வீரர் அணிக்கு மீண்டும் கிடைப்பது அரிதாகும். அவர் நல்ல பார்மில் இருந்தால் மேட்ச் வின்னராக விளங்குவார். வீரர்கள் தேர்வு தேர்வாளர்கள் கையில் உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி உடல் தகுதி தேர்விலும் யுவராஜ்சிங் வெற்றி பெற்றால் இந்திய ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியும். நெஹரா தனது 36-வது வயதில் அணியில் மீண்டும் இடம் பிடித்தார். அதே போல் யுவராஜ்சிங்கினால் ஏன் அணிக்கு திரும்ப முடியாது’ என்றார்.

* டெல்லியில் நடந்து வரும் புரோ மல்யுத்த லீக் போட்டிக்கான டெல்லி சுல்தான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வீரரும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான சுஷில்குமார் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் கூறுகையில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தகுதி சுற்று பந்தயத்தில் இருந்தே எனது முழங்காலில் பிரச்சினை ஏற்பட்டது. காயத்தின் தன்மை மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதால் மல்யுத்த லீக்கில் இருந்து விலகினேன்’ என்றார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங்கும், பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த எல்.பாலாஜியும், பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சியும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* அகில இந்திய பல்கலைக்கழக கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மத்தியபிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 25-18, 16-25, 25-22, 25-23 என்ற செட் கணக்கில் மகாத்மா காந்தி பல்கலைக்கழக (கேரளா) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story