டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், யுகி பாம்ப்ரி அபாரம்


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், யுகி பாம்ப்ரி அபாரம்
x
தினத்தந்தி 5 Feb 2017 8:25 PM GMT (Updated: 5 Feb 2017 8:25 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், யுகி பாம்ப்ரி தேடித்தந்த வெற்றியின் மூலம் இந்தியா 4–1 என்ற கணக்கில் நியூசிலாந்தை பந்தாடியது.

புனே,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், யுகி பாம்ப்ரி தேடித்தந்த வெற்றியின் மூலம் இந்தியா 4–1 என்ற கணக்கில் நியூசிலாந்தை பந்தாடியது.

ராம்குமார் அபாரம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய–ஓசியானியா குரூப்1–ல் இந்தியா–நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனே நகரில் கடந்த 3–ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி, ராம்குமார் வெற்றி பெற்றனர். 2–வது நாளில் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்– விஷ்ணு வர்தன் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா, கடைசி நாளான நேற்று இரண்டு மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ஒன்றில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கியது.

முதலாவது மாற்று ஒற்றையரில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார், நியூசிலாந்தின் பின் டியர்னியை எதிர்கொண்டார். காற்றின் தாக்கத்தை சமாளித்து ஆதிக்கம் செலுத்திய ராம்குமார் முதல் செட்டை வெல்வதில் மட்டும் கொஞ்சம் தடுமாறினார். அடுத்த இரு செட்டுகளிலும் அவரது அதிரடிக்கு எதிராளியால் தாக்குப்பிடிக்க முடிவில்லை. 2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் ராம்குமார் 7–5, 6–1, 6–0 என்ற நேர் செட்டில் டியர்னியை துவம்சம் செய்தார்.

தரவரிசையில் 276–வது இடம் வகிக்கும் ராம்குமார் 12 ஏஸ் சர்வீஸ்களை வீசியது குறிப்பிடத்தக்கது. ராம்குமாருடன் ஒப்பிடும் போது டியர்னி நிறைய தவறுகளை இழைத்தார். குறிப்பாக ‘டபுள் பால்ட்’ மட்டும் 16 முறை செய்தார்.

யுகியும் வெற்றி

ராம்குமாரின் வெற்றியின் மூலம் அடுத்த ஆட்டத்தின் முடிவு அவசியமில்லாமல் போய் விட்டது. கடைசி மாற்று ஒற்றையர் ஆட்டம் 3 செட் அடிப்படையில் நடத்த இரு அணிகளும் ஒப்புக் கொண்டன. அதன்படி அடியெடுத்து வைத்த இந்தியாவின் யுகி பாம்ப்ரி 7–5, 3–6, 6–4 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் ஜோஸ் ஸ்டாதமை அடக்கினார்.

முடிவில் இந்த போட்டியில் இந்தியா 4–1 என்ற கணக்கில் நியூசிலாந்தை சாய்த்து 2–வது சுற்றுக்குள் நுழைந்தது. இந்திய அணி அடுத்து உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஏப்ரல் 7–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறும். இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


Next Story