மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி வெற்றி


மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி வெற்றி
x
தினத்தந்தி 2 Jan 2018 9:30 PM GMT (Updated: 2 Jan 2018 7:10 PM GMT)

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றார்.

புனே,

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றார்.

மராட்டிய ஓபன் டென்னிஸ்

சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயரில் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 118–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, வைல்டு கார்டு மூலம் தகுதி பெற்ற உள்ளூர் வீரர் அர்ஜூன் காதேவை சந்தித்தார்.

இதில் யுகி பாம்ப்ரி 6–3, 6–4 என்ற நேர்செட்டில் அர்ஜூன் காதேவை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். யுகி பாம்ப்ரி இந்த மைதானத்தில் தொடர்ச்சியாக பெற்ற 11–வது வெற்றி இதுவாகும். 2–வது சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, பிரான்ஸ் வீரர் பியாரே ஹக்ஸ் ஹெர்பெர்ட்டை சந்திக்கிறார்.

சுமித் நாகல் தோல்வி

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 223–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் 3–6, 3–6 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய பெலாரஸ் வீரர் இல்யா இவாஷ்காவிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். இதன் மூலம் சுமித் நாகலின் தொடர்ச்சியான 7 ஆட்ட வெற்றி முடிவுக்கு வந்தது.

மற்ற ஆட்டங்களில் ரிபின் ஹாஸ் (நெதர்லாந்து), லாஸ்லோ டெரே (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்று 2–வது சுற்றுக்குள் நுழைந்தனர்.


Next Story