பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 3 Dec 2021 9:12 PM GMT (Updated: 3 Dec 2021 9:12 PM GMT)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து பிச்சி கிலோ ரூ.1,100-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி:
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து பிச்சி கிலோ ரூ.1,100-க்கு விற்பனையானது.
தோவாளை மார்க்கெட்
தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள்.
பூக்கள் விலையானது பண்டிகை காலங்களிலும், திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களிலும் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் குறைந்தும் காணப்படும். 
பிச்சி, முல்லை விலை உயர்வு
இந்தநிலையில், தோவாளை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.850-க்கு விற்பனையான பிச்சி பூ நேற்று ரூ.250 உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனையானது. இதுபோல், ரூ.800-க்கு விற்பனையான முல்லை ரூ.200 உயர்ந்து ரூ.1000-க்கும் விற்பனையானது. 
பூக்களின் விலை உயர்வு குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், "தற்போது சாரல் மழையும், பனிப்பொழிவும் உள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்தது. மேலும், சபரிமலை சீசன் மற்றும் முகூர்த்த சீசன் என்பதால் பூக்களின் தேவை சுமார் 40 டன்களுக்கு மேல் உயர்ந்தது. ஆனால், தற்போது 15 முதல் 20 டன் பூக்களே வருகிறது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால் விலை உயர்ந்தது" என்றார். 
விலை விவரம்
மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.450, மல்லிகை ரூ.1,200, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.40, தாமரை (100எண்ணம்) ரூ.2000, கோழிப்பூ ரூ.80, பச்சை (ஒரு கட்டு)ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.200, ஸ்டம்புரோஸ் (ஒரு கட்டு) ரூ.370, மஞ்சள் கிரேந்தி ரூ.120, சிவப்பு கிரேந்தி ரூ.120, சிவந்தி (மஞ்சள்) ரூ.130, சிவந்தி (வெள்ளை) ரூ.200, கொழுந்து ரூ.130, மரிக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது.

Next Story