14.1.2021 முதல் 12.2.2021 வரை
ரிஷப ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். சுக்ரன் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் என்பதால், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப நல்ல திருப்பங்கள் வரப்போகின்றது. அஷ்டமத்துச் சனி விலகி விட்டதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
ஜென்ம ராகுவின் சஞ்சாரம்
இம்மாதம் ஜென்மத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். ராகு சஞ்சரிக்கும் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், குருவின் வீட்டில் இருக்கின்றார். குரு பகவான் நீச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே அக்கறை செலுத்தாத காரியத்தில் கூட ஆதாயம் கிடைக்கும். ஏழில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணையோடு பிரச்சினை ஏற்பட்டாலும், அதைச் சமாளித்து விடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கூட்டுக்கிரக யோகம்
உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ராஜ்ஜித ஸ்தானத்தில், மாதத் தொடக்க நாளில் சந்திரன், சூரியன், குரு, புதன், சனி ஆகிய 5 கிரகங்களும் சஞ்சரிக்கின்றார்கள். இந்தக் கூட்டுக்கிரக யோகத்தின் விளைவாக பல நன்மைகள் உங்களுக்கு வரப்போகின்றது. குறிப்பாக உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். கவலைகள் அகலும். காரியங்களை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். வளர்ச்சிக்குரிய காரியங்கள் நடைபெறும்.
மகர - புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மகர ராசியில் ஜனவரி 21-ந் தேதி வக்ரம் பெறுகின்றார். பிப்ரவரி 10-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இந்த காலத்தில், குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினை, பிள்ளைகளாலும் பிரச்சினை என்ற நிலை உருவாகும். தன்னம்பிக்கையோடு அதைச் சமாளிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான். அவர் சனியோடு சேர்ந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தில் இருந்தாலும், சூரியனும் அவரோடு இணைந்திருப்பதால், எதிர்பார்த்ததைக் காட்டிலும் நற்பலன்கள் கூடுதலாகவே கிடைக்கும். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் மதிப்பு, மரியாதை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். ராசிநாதன் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
இம்மாதம் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 15, 19, 20, 25, 26, 30, 31 பிப்ரவரி: 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். பணத்தேவைஉடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள், உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் திருமண முயற்சிகள் கை கூடும் நேரம் இது. பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் திறமை பளிச்சிடும். அபிராமி அம்மன் வழிபாடு அனுகூலம் தரும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கு)
ரிஷப ராசி நேயர்களே!
வந்துவிட்டது புத்தாண்டு. தளர்ச்சியில் இருந்த உங்களுக்கு, இனி வளர்ச்சி வரப்போகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாக விளங்கும் குரு பகவான் நீச்சம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கின்றார். அந்த அடிப்படையில் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் 2021 உங்களுக்கு இனிய பலன்களை ஏராளமாக வழங்கப் போகின்றது. பொதுவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஸ்தம்பித்து நின்ற தொழில் இனி தானாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கப் போகின்றீர்கள்.
குருச்சந்திர யோகத்தோடும், நீச்ச பங்க ராஜயோகத்தோடும், இந்த ஆண்டின் தொடக்கம் அமைகின்றது. உங்களுக்கு யோகம் செய்யும் சனி இப்பொழுது அஷ்டமத்தில் இருந்து 9-ம் இடத்திற்கு வந்து விட்டது. எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். இஷ்ட தெய்வங்களுக்கும், குலதெய்வங்களுக்கும் நீங்கள் செய்ய நினைத்த பிரார்த்தனைகளை இப்பொழுது செய்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் கிரகங்கள் எந்தெந்த இடங்களில் பலம் பெற்று இருக்கின்றன. எந்தெந்த கிரகங்கள் பலம் குறைவாக இருக்கின்றன என்பதை நாம் எடை போட்டுப் பார்த்தே வருட பலன்களை அறிந்து கொள்ள இயலும். சுயஜாதகம் பலம் பெற்றிருந்தால் கோட்சார பலன்களின் குறுக்கீடு எதுவும் செய்யாது. திசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு திடீர் மாற்றங்கள், மனக்கசப்புகள் தரும் விதத்தில் அமையலாம் என்பதால், யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
அந்த அடிப்படையில் உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால், சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் கூடுதலாகவே இருக்கின்றது. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும், மனநிறைவு குறைவாகவே இருக்கும். கோபத்தைக் குறைத்துக்கொள்வதன் மூலமும், குணமோடு நடந்து கொள்வதன் மூலமும் குடும்பத்தில் ஒற்றுமையை பலப்படுத்திக் கொள்ளலாம். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால் சஞ்சலங்கள் அதிகரிக்கும். சில காரியங்கள் நடைபெறுவது போல் இருந்து கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். சகப் பணியாளர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதை முன்னிட்டோ அல்லது அவர் விலகுவதை முன்னிட்டோ அவருடைய வேலையும் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உயர் அதிகாரிகள் மனம் கோணாமல் இருக்க, நீங்கள் பெரும்பிரயாசை எடுக்க வேண்டியதிருக்கும். அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால் அரசாங்க பிரச்சினை தலைதூக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆண்டின் மையப்பகுதியில் அது கைகூடலாம். ஒன்பதாமிடத்தில் குரு, சனி, புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. அந்த மூன்று கிரகங்களின் மீதும் சந்திரனின் பார்வை பதிகின்றது. எனவே குருச்சந்திர யோகம், சனி சந்திர யோகம் ஆகிய யோகங்கள் வந்து சேருகின்றன. எனவே கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் சூழல் உண்டு.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருப்பதால் பிதுர்ரார்ஜித ஸ்தானம் புனிதமடைகின்றது. அவர் நீச்சம் பெற்றிருப்பது ஒருவழிக்கு நன்மைதான். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். எனவே அஷ்டமாதிபதி நீச்சம் பெறும்பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப எதிர்பாராத சில நல்ல மாற்றங்களை குரு பகவான் வழங்கலாம். திட்டமிடாது நீங்கள் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தனவரவு திக்குமுக்காட வைக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் அவர் நீச்சம் பெற்றாலும் கூட, போதுமான அளவிற்கு பொருளாதாரம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது அவற்றைப் படித்துப்பார்த்துக் கையெழுத்திடுவது நல்லது. வெளிநாட்டில் இருந்து ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். சுயஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து முடிவெடுத்துக் கொள்வது நல்லது. பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனத் துடன் செயல்படுவது நல்லது. புதியவர்களை நம்பி அகலக்கால் வைக்க வேண்டாம். எதையும் திட்டமிட்டுச் செய்வதன் மூலமே வெற்றிப் பாதையை அமைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். எனவே ஆண்டின் தொடக்கத்தில் உடல்நலம் சீராகவே இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணி ஓய்விற்கு பிறகும் கூட உங்களுக்கு மீண்டும் பணிபுரியும் அமைப்பு வரலாம். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிட்டும். அரசியல்வாதிகளும், அதிகார பதவியில் உள்ளவர்களும் உங்களுக்கு நட்பாகி நல்ல காரியங்கள் பலவற்றையும் முடித்துக்கொடுப்பர். சகோதரர்களின் பாசம் அதிகரிக்கும். உங்களை விட்டுச்சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்திணைவர். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அவர்களின் மேற்படிப்பு மற்றும் விவாகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் செய்த முயற்சி கைகூடும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். பொதுவாகவே உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால், வக்ரம் பெறுவது நன்மைதான். அதிலும் குறிப்பாக 10-ம் இடத்தில் வக்ரம் பெறுவதால் தொழில் வெற்றிநடை போடும். கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். விலகிச் சென்றவர்களுக்கு கூட மீண்டும் பணியில் சேர அழைப்புகள் வரலாம்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நீச்சம் பெறும் குரு வக்ரமடைவது நன்மைதான். பெற்றோர் வழியில் இருந்து வந்த விரோதங்கள் விலகும். அவர்கள்் உற்ற துணையாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொடுப்பர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் சுமுகமாக முடியும். சகோதரத்தின் உறவில் மட்டும் விரிசல்கள் ஏற்படலாம்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. முன்னேற்றப் பாதையில் சென்ற தொழில் ஸ்தம்பித்து நிற்கலாம். முக ஸ்துதிக்காக பேசிய நண்பர்களை நம்பிச் செயல்பட்டு விரயங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல்நலச் சீர்கேடும், மருத்துவச் செலவுகளும் உண்டு. இக்காலத்தில் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
செவ்வாய்-சனி பார்வைக் காலம்
மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்றாலும், உங்களைப் பொறுத்தவரை மிகமிக விழிப்புணர்ச்சி தேவைப்படும் நேரம். 14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். அதே சமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயைப் பார்த்து புனிதப்படுத்துகின்றார். 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம் பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தம பார்வையாகப் பார்க்கின்றார்.
இதுபோன்ற காலங்களில் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ‘வட்டி கட்ட முடியவில்லையே’ என்று வாங்கிய கடனுக்கு சொத்தை விற்க நேரிடலாம். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்க நேரிடும். வாழ்க்கைத் துணையோடும், உடன்பிறப்புகளோடும் அடிக்கடி சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் பொருளாதார விருத்தி அதிகரிக்க, தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடலாம். அபிராமி அம்மன் வழிபாடு அனைத்து யோகங் களையும் கொடுக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா வழிகளிலும் நற்பலன்களை கொடுக்கப் போகின்றது. வெளியேறி இருந்தவர்கள் வீடு நோக்கி வரும் வாய்ப்பு உருவாகும். கணவன்- மனைவிக்குள் உறவு பலப்படும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிக்கும் விதத்தில் குருவின் பார்வை கைகொடுக்கின்றது. அஷ்டமத்துச் சனி விலகிவிட்டதால் உறவினர் பகை அகலும். தாய் மற்றும் சகோதரத்தின் ஆதரவு உண்டு. பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளும், கல்விக்காகச் செய்த முயற்சிகளும் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். உயர்பதவியும் தேடி வரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஒன்பதாமிடத்தில் சனி, உயர்வுகள் வந்திடும் இனி! ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 9-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் என்பதால், சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அந்த குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் அங்குள்ள குருவோடு இப்பொழுது சனியும் சேர்ந்து ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படப் போகின்றது. மகரத்தில் குரு இருக்கும் பொழுது, சனி சாதகமான பலன்களை ஏராளமாக கொடுக்கலாம்.
பொன் பொருள் சேர்க்கை உண்டு
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 9-ம் இடம் பாக்கிய ஸ்தானமாகவும் கருதப்படுகின்றது. அதே நேரத்தில் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், இதுவரை தடைப்பட்ட உயர்வுகள் தானாக வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் விதத்திலேயே இந்த சனிப்பெயர்ச்சி அமைகின்றது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் வந்து சேரும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல்நலம் சாதாரண சிகிச்சையிலேயே குணமாகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3, 6, 11 ஆகிய மூன்று இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே இதுவரை பிரச்சினையுடன் வாழ்ந்த உங்களுக்கு மன அமைதி கிடைக்கப்போகின்றது. 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். மேலும் யோககாரகனாக சனி விளங்குவதால், உத்தியோகத்தில் திடீரென புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற விதம் சம்பள உயர்வுகளும் கூட கிடைக்கலாம்.
சனியின் பார்வை 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரிய சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சுக ஸ்தானாதிபதி சூரியன் என்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். குடும்பத்தில் விரிசல்கள் அகன்று உறவு பலப்படும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி தொடரும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திருமண வாய்ப்புகள் கைகூடும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். இடையில் கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கப் போகின்றார். எனவே ‘சொந்த வீடு கட்டியும் அதில் வசிக்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதில் குடியேறும் முயற்சி கைகூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில், மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ல் குரு வருவதால் பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் உருவாகலாம். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘விபரீத ராஜயோக’ அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அப்போது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனநிம்மதி குறையும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்க நேரிடும். தூரதேசத்தில் உள்ள சொந்தங்களால் சில நன்மைகள் ஏற்படும். குடும்ப ரகசி யங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அப்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் பலம்பெறுகின்றது. வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை கேட்டுக் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கலாம்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் அபிராமி அம்மன் படம் வைத்து, அபிராமி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எளிதில் வெற்றி கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரம் அடைகிறார்.
இந்த காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளை நம்பி செயல்பட இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனம் தேவை.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி, உங்கள் ராசிக்கு சாதகமான பெயர்ச்சியாகவே இருக்கின்றது. கல்யாணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றில் இதுவரை இருந்த தடைகள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் எளிதில் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
ராசிக்கு வருகிறார் ராகு..யோசித்துச் செயல்படுவது நல்லது..
ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கப் போகின்றார். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போகின் றார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து அந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் பவனி வருகின்ற பொழுது அதன் பாதசாரத்திற்கேற்ற பலன்களை வழங்குவர்.
நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். மேலும் 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி செல்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகி விடுகின்றது. மேலும் 2021 நவம்பர் மாதத்தில் கும்பத்திற்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 4, 6 இடங்களை பார்க்கப் போகின்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இப்பொழுது ஜென்ம ராசிக்கு மாறுகின்றார். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போறார். இதன் அடிப்படையில் பலன்களைப் பார்ப்போம்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். செவ்வாய், உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இடமாற்றம், வீடு மாற்றங்கள் வரலாம். உத்தியோகத்தில் எதிர் பார்க்காத மாற்றங்கள் வந்தாலும், அதுவும் நீங்கள் விரும்பத்தக்கதாகவே அமையும். பூர்வீக சொத்துக்களையோ அல்லது புதிதாக வாங்கிய சொத்துக்களையோ ஒருசிலர் விற்க நேரிடலாம். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் ஒருசிலருக்கு உதவிகள் கிடைக்கலாம்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதியாவார். மூன்றாமிடம் என்பது வெற்றிகள் ஸ்தானம். அதோடு உடன்பிறப்புகள் மற்றும் தேக பலம், பணியாளர்கள், தைரியம், தன்னம்பிக்கை போன்றவற்றைக் குறிக்கும் இடமாகும். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். கடல் வணிகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கை கூடும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு ஒரு நல்ல காரியம் நடைபெறும். இக்காலத்தில் எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். சூரியன் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு அதிபதியாவார். வீடு, வாகனம், தாய், இடம், பூமி, சவுகர்யம், கல்வி, சந்தோஷம் அனைத்தையும் குறிப்பது 4-ம் இடமாகும். எனவே அதற்குரிய இடத்தின் கிரக சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல் நலம் சீராகும். ஒருசிலருக்கு வீடு கட்டும் யோகமோ அல்லது வாங்கும் யோகமோ ஏற்படும். எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும் நேரமிது.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
கேதுபகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக கிடைக்கும் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். புதன், உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். தன பஞ்சமாதிபதியின் சாரத்தில் கேது உலா வரும் பொழுது, வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். குடும்பப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வேலை கிடைக்காத பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத பிள்ளைகளுக்கும் மாலை கிடைக்கும். உதிரி வருமானங்கள் வரக்கூடிய நேரமிது. புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவருடைய சாரத்தில் கேது பவனி வரும் பொழுது, தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வளம் அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டிய ஆலயத் திருப்பணிகளை தொடர்ந்து செய்யத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தொழிலை விரிவு செய்ய நினைத்து புதிய பணியாளர்களைச் சேர்க்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாகவே வந்து சேரும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு வெளி மாநிலங்களிலிருந்தும், தூர தேசங்களில் இருந்தும் கூட அழைப்புகள் வரலாம். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும். ஒருசிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஜென்ம ராகுவால் சிறப்பான பலன்களைப் பெறவும், சப்தம கேதுவால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையவும், இல்லத்துப் பூஜையறையில் சிவன் படம் வைத்து திருவாசகம் படித்து வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஆலயங்களுக்குச் சென்று பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.
பெண்களுக்கு...
இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக ஜென்ம ராகுவாக சஞ்சரிப்பதால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. ஜனவரி 2021-க்கு மேல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் கருமாரியம்மன் வழிபாடும், பாராயணமும் செய்ய வேண்டும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஒன்பதில் வந்தது குருபகவான், உன்னத வாழ்வு இனி அமையும்!
ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 9-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு சுமார் ஓராண்டு காலம் வீற்றிருந்து, அதன் பார்வை பலனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமான குரு, இப்பொழுது உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். ஆனால் குரு பகவான் இருக்குமிடம் நீச்ச வீடாகும். இருப்பினும் வலிமை இழந்த குரு பார்ப்பதால், சுக்ரன் ஆதிக்கம் பெற்ற உங்கள் ராசிக்கு நன்மைகளே கிடைக்கும்.
இடையில் சில மாதங்கள் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்’ என்பது பழமொழி. சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மிஞ்சும் அளவிற்கு பலன் கிடைக்கும். இடையில் ஏதேனும் இடையூறுகள் வருமேயானால், வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியையும், 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல்நலம் சீராக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில், உத்தியோகம், பொதுநலம், அரசியல் போன்றவற்றில் நீங்கள் நினைத்தவை நடைபெறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. இதன் பலனாக உங்களுக்கு கிடைக்கும் யோகங்கள் அனைத்தும் படிப்படியாக வந்து சேரும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தாய்வழி ஆதரவு கிடைக்கும். ‘வீடு கட்ட வேண்டும், இடம் வாங்க வேண்டும், கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டும்’ என்றெல்லாம் கனவு கண்டவர்களுக்கு அவை கைகூடும் நேரமிது. அதற்காக கடன்கேட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாலும் சரி, வங்கிகளின் ஒத்துழைப்பை நாடினாலும் சரி உடனடியாக பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பயணங்கள் பலன்தருவதாக அமையும். நீண்ட நாட்களாக புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்று நினைத்தவர்கள், இப்பொழுது அதைச் செயல்படுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத் தில் இதுவரை மறுக்கப்பட்ட சலுகைகள் இப்போது கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைப்பதோடு, உடன் பணிபுரிபவரால் ஏற்பட்ட உபத்திரவங்களும் குறையும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதி ஆவார். எனவே எதிர்பார்த்த நன்மைகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படுவர். தொழில் புரிவோர், வளர்ச்சியை முன்னிட்டுப் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்வர். திறமை பளிச்சிடும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். விலகிச்சென்ற வரன்கள் கூட விரும்பி வரலாம். மனமுறிவு ஏற்படும் அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட தம்பதியர் கூட மனம் மாறி ஒற்றுமையாக வாழ வழிபிறக்கும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் வாய்ப்பு உண்டு. ‘நடக்குமோ, நடக்காதோ’ என்று நினைத்த சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். வேலைவாய்ப்புக்காக புதிய இடத்தில் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பர். கேட்ட சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் இக்காலம், ஒரு பொற்காலமாகும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகம் என்பதால் பகைவன் வலிமை இழக்கும் போது நன்மைகள் அதிகம் நடைபெற வேண்டுமல்லவா?. எனவே பொருளாதார நிலை உயரும். புதியவர்களின் சந்திப்பால் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கிடைக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக்கொள்ளலாம். தொழில் வளம் பெருகும். உத்தியோக முன்னேற்றம் எதிர்பார்த்தபடி நடைபெறும். பிரதோஷ வழிபாட்டின் மூலம் பெருமைகள் சேரும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் சிவ குடும்பப்படம் வைத்து, தினமும் திருவாசகம் பாடி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை அன்று குரு கவசம் பாடி குரு பகவானையும் வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமையப்போகின்றது. மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். தாய்- தந்தையர்களின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு முன்னேற்றத்துடன் கூடிய இடமாற்றம் கிட்டும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/18/2021 12:23:19 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Taurus