ஜல்லிக்கட்டு போட்டி நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆதரவு


ஜல்லிக்கட்டு போட்டி நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆதரவு
x
தினத்தந்தி 10 Jan 2017 10:30 PM GMT (Updated: 10 Jan 2017 7:48 PM GMT)

ஜல்லிக்கட்டு போட்டி நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆதரவு

சென்னை,

ஜல்லிக்கட்டுக்கு நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சூரி ஆகியோர் ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறு தழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் அவர்களுடைய ஒருங்கிணைந்த குரல். ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், ஜல்லிக்கட்டு தேவையானது என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கொம்பு வச்ச சிங்கம்டா

இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவித்து இருக்கிறார்.

Next Story