புதிய படங்களை கசிய விடும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தின் அட்மின் கைது


புதிய படங்களை கசிய விடும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தின் அட்மின் கைது
x
தினத்தந்தி 13 Sep 2017 5:33 AM GMT (Updated: 13 Sep 2017 5:33 AM GMT)

தமிழ் திரையுலகிற்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தின் அட்மின் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தமிழ் ராக்கர்ஸ் என்பது மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு வலைத்தளம். புதிய தமிழ் சினிமா ரிலீஸ் ஆனதும், அதனை உடனடியாக தனது வலைத்தளத்தில் கசிய விடுவதை  வழக்கமாகக் கொண்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் திரையுலகிற்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தை எத்தனை முறை முடக்கினாலும் மீண்டும், மீண்டும் புதிய பெயர்களில் தனது செயலை அரங்கேற்றி வந்தனர் அதன் அட்மின்கள்.

தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தின் அட்மின்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று தனது தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குறுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான விஷால், கூறுமளவுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்து வந்தது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் ராக்கர்ஸின் செயலால் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கவுரி ஷங்கர் என்பவரை சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கவுரி ஷங்கர் 3ஆம் நிலை அட்மின் என்று கூறப்படுகிறது, இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம், முதல்நிலை அட்மின்கள் மற்றும் இந்த வலைத்தளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டால் தான் தமிழ் ராக்கர்ஸ் முழுமையாக ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எனினும், தமிழ் ராக்கர்ஸை ஒழித்தே தீருவேன் என்று கூறிய நடிகர் விஷாலுக்கு இது முதல் வெற்றி என்று சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகிறது.

Next Story