“தமிழ்நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது” பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேச்சு


“தமிழ்நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது” பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2018 11:00 PM GMT (Updated: 19 Jan 2018 11:00 PM GMT)

“தமிழ்நாட்டில் கருத்து சொல்ல முடியவில்லை. சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது” என்று பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேசினார்.

சென்னை,

பார்த்திபன், நாசர், ஜெயப்பிரதா, சுஹாசினி, ரேகா, ரேவதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் கேணி. எம்.ஏ.நிஷாத் டைரக்டு செய்துள்ளார். சஜீவ் பி.கே, ஆன் சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தமிழ், மலையாளத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. கேணி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டு பேசியதாவது:-

“நாடு பசுமை பூங்காவாக மாற வேண்டுமென்றால் தண்ணீர் தேவை. ஆன்மிக அரசியலை பற்றி சமீபத்தில் அறிந்திருப்பீர்கள். கேணி, நீர்மீக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டும். நதிகளை இணைப்பதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும்.

கிணற்றுக்காக போராட்டம்

அப்படி இதயங்களை இணைக்கும் படமாக கேணி இருக்கும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தை சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே இந்த படத்தின் கதை.

பொதுவாக நீர் பிரச்சினை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக்கொண்டு கேரளாவோ, தமிழ்நாடோ அரசியல் செய்யலாம். ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.

சகிப்புத்தன்மை

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் அதிகமாக இருக்கிறது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சனம் செய்யலாம். தமிழகத்தில் கருத்து சொல்ல முடியவில்லை.

எனக்கு பெரியார் விருது கொடுத்தபோது சில நல்ல விஷயங்களை பேசினேன். அதற்கு கூட சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சித்தார்கள். அந்த அளவுக்கு இங்கு சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளா சிறந்து விளங்குகிறது”.

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

விழாவில் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, ரேகா, ஜெயப்பிரதா, அனுஹாசன், டைரக்டர் எம்.ஏ.நிஷாத் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். 

Next Story