பதவி காலம் முடிகிறது நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்


பதவி காலம் முடிகிறது நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்
x
தினத்தந்தி 2 Feb 2018 11:15 PM GMT (Updated: 2 Feb 2018 9:56 PM GMT)

நடிகர் சங்கத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. அதில் 2 அணிகள் மோதின. விஷால் தலைமையிலான அணி வென்று அவர் பொதுச்செயலாளராக தேர்வானார். நாசர் தலைவராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள்.

புதிய நிர்வாக குழுவினர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி வருகிறார்கள். கட்டுமான பணியை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் செங்கல் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தனர். கட்டிட செலவுகளுக்காக சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தி விட்டு வந்தனர்.

இந்த விழா மூலம் ரூ.10 கோடிக்கு மேல் நிதி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில்தான் முடியும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நிர்வாகிகளுக்கான 3 ஆண்டு பதவி காலம் முடிவதால் நடிகர் சங்கத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஏப்ரல் மாதம் தேர்தலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக விஷால் அறிவித்து உள்ளார். அவரது அணியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் தேர்தலில் நிற்கின்றனர்.

விஷாலை எதிர்த்து ராதாரவி அணியினர் மோதுகிறார்கள். சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் 3 பேரும் தேர்தலில் நிற்க முடியாது என்று விஷால் தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் இந்த நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று தேர்தலில் நிற்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். ராதாரவி தரப்பில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் 2 ஆயிரம் பேர் நாடக நடிகர்கள். இவர்களிடம் ஆதரவு திரட்டும் பணியில் இப்போதே இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

Next Story