‘பத்மாவத்’ படம் வசூல் ரூ.300 கோடியை நெருங்குகிறது


‘பத்மாவத்’ படம் வசூல் ரூ.300 கோடியை நெருங்குகிறது
x
தினத்தந்தி 8 Feb 2018 10:30 PM GMT (Updated: 8 Feb 2018 8:08 PM GMT)

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

ரூ.180 கோடி செலவில் தயாரான ‘பத்மாவத்’ படம் வசூல் ரூ.300 கோடியை நெருங்குகிறது

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாற்றை தவறாக சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தினார்கள்.

தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பஸ்களை எரித்து வன்முறைகளில் ஈடுபட்டனர். தீபிகா படுகோனே, படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. வழக்குகளும் தொடரப்பட்டது. தணிக்கை குழுவினரும் அனுமதி அளிக்க மறுத்தனர்.

அதன்பிறகு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவால் பத்மாவத் படம் திரைக்கு வந்தது. ஆனாலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், அரியானா மாநிலங்களில் பல இடங்களில் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் எதிர்ப்பை மீறி பத்மாவத் படம் இந்தியா முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்த படம் ரூ.180 கோடி செலவில் எடுக்கப்பட்டு இருந்தது. படம் இதுவரை ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் ரூ.300 கோடியை தொடும் என்றும் இந்தி பட வினியோகஸ்தர் ஒருவர் கூறினார். டிஜிட்டல், டெலிவிஷன் உரிமைகள் மூலமும் ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருந்தனர். தமிழிலும் இந்த படம் அதிக வசூல் ஈட்டி உள்ளது. படம் வெளியாகாத இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Next Story