“என் மகள் திருமணத்தில், அவளின் அம்மா கலந்து கொள்வார்”


“என் மகள் திருமணத்தில், அவளின் அம்மா கலந்து கொள்வார்”
x
தினத்தந்தி 10 Feb 2018 10:30 PM GMT (Updated: 10 Feb 2018 7:20 PM GMT)

“என் மகள் கீர்த்தனாவின் திருமணத்தில், அவளுடைய அம்மா (நடிகை சீதா) கலந்து கொள்வார். எந்த உறவுக்கும் பிரிவு என்று ஒன்று வரலாம். ஆனால், அம்மா என்ற உறவு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது” என்று நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் கூறினார்.

சென்னை,

நடிகர்-டைரக்டர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பார்த்திபன் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ‘புதிய பாதை’ படத்தில், சீதா கதாநாயகியாக நடித்தார். திருமணத்துக்குப்பின், அவர் நடிக்கவில்லை. இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என்ற 2 மகள்களும், ராக்கி பார்த்திபன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.

இவர்களில் கீர்த்தனா, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் சிறுமியாக நடித்து இருந்தார். அதன் பிறகு அவர், டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி டைரக்டராக சேர்ந்தார். அவருக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

மணமகனின் பெயர், அக்‌ஷய். ‘விஸ்காம்’ படித்தவர். இவரும் திரைப்பட டைரக்டர்தான். ‘பீட்ஷா’ படத்தை இந்தியில் டைரக்டு செய்திருக்கிறார். கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம், சென்னையில் அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி நடக்கிறது. இது, காதல் திருமணம். இரண்டு பேரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கிறது.

பார்த்திபனும், சீதாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

“கீர்த்தனாவின் திருமணத்தில் சீதா கலந்து கொள்வாரா?” என்று பார்த்திபனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பார்த்திபன் கூறியதாவது:-

“என் மகள் கீர்த்தனாவின் திருமணம், மகளிர் தினத்தில் நடக்கிறது. அன்று, மகளிருக்கு உரிய மரியாதையை எல்லா ஆண் மகன்களும் செய்ய வேண்டும். என் வாழ்க்கை என் அம்மாவில் தொடங்கி மகள் வரை வந்து இருக்கிறது. எந்த உறவுக்கும் பிரிவு என்று ஒன்று வரலாம். ஆனால், அம்மா என்ற உறவு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

கீர்த்தனாவின் திருமணத்தில், கீர்த்தனாவின் அம்மாவும், அவர் அம்மாவும், அக்‌ஷய் அம்மாவும், அவர் அம்மாவும், என் அம்மாவும், இன்னும் நிறைய அம்மாக்களும் சேர்ந்து சிறப்பாக நடத்தி வைப்பார்கள்.” இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

Next Story