திருமணத்துக்காக சினிமாவை விட்டு சுருதிஹாசன் விலகலா?


திருமணத்துக்காக சினிமாவை விட்டு சுருதிஹாசன் விலகலா?
x
தினத்தந்தி 12 Feb 2018 10:05 PM GMT (Updated: 12 Feb 2018 10:05 PM GMT)

சுருதிஹாசனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் புதிய படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

சுருதிஹாசனுக்கும் லண்டன் நடிகர் மைக்கேலுக்கும், காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதிய படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. தயவு செய்து எனது திருமணத்தையும், சினிமாவையும் இணைத்து பேச வேண்டாம். திரையில் உங்களை நீண்ட நாட்கள் பார்க்க முடியவில்லையே.. சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. படங்களில் மட்டும்தான் நான் நடிக்க வேண்டுமா? வேறு வேலைகளே எனக்கு கிடையாதா? எனது வாழ்க்கை சினிமாவுடன் மட்டுமன்றி வேறு நிறைய விஷயங்களோடு பின்னி பிணைந்து இருக்கிறது. எனவே சினிமாவில் நடிக்காமல் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்றும், வேறு வேலைகள் எதுவும் செய்ய மாட்டேன் என்றும் அர்த்தம் கொள்ளக்கூடாது.

எனக்கு இசை அறிவு இருக்கிறது. எழுதவும் செய்கிறேன். இப்படி நடிப்பு தவிர்த்து பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கதாநாயகி ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் நடிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. பிறகு அதை நோக்கி முன்னேறினேன். கதாநாயகியாகவும் என்னை நிலைநிறுத்திக் கொண்டேன்.

இப்போது நல்ல கதைகளில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என் மனம் என்ன சொல்கிறதோ அதை செய்கிறேன். கதாநாயகியாகவும் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது எனக்கு கிடைத்துள்ள நேரத்தை மனப்பூர்வமாக அனுபவிக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார். 

Next Story