முன்னணி ‘காமெடி’யன்கள் கதாநாயகன் ஆனார்கள் நகைச்சுவை நடிகர்கள் சம்பளம் உயர்ந்தது


முன்னணி ‘காமெடி’யன்கள் கதாநாயகன் ஆனார்கள் நகைச்சுவை நடிகர்கள் சம்பளம் உயர்ந்தது
x
தினத்தந்தி 14 Feb 2018 10:30 PM GMT (Updated: 14 Feb 2018 10:17 PM GMT)

காமெடி நடிகர்கள் சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி கதாநாயகர்களுக்கு இணையாக கேட்க ஆரம்பித்து விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.

ந்திரபாபு, என்.எஸ்.கிருஷ்ணன். நாகேஷ், தங்கவேலு, டி.எஸ்.பாலையா, சுருளிராஜன், மதுரம், மனோரமா என்று பழைய படங்களில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம். அதன்பிறகு கவுண்டமணியும் செந்திலும் ராஜாங்கம் நடத்தினார்கள். கவுண்டமணி, 16 வயதினிலே படத்தில் ‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்று வசனம் பேசி அறிமுகமாகி, 40 வருடங்களுக்கு மேல் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.

அவருக்கு பிறகு வடிவேலு, விவேக், சந்தானம் என்று பலர் வந்தனர். 1950 மற்றும் 60-களில் இருந்த காமெடியன்களும் அதற்கு பிறகு வந்தவர்களும் ஒரு படத்துக்கு வாங்கிய சம்பளம் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் இப்போதைய காமெடி நடிகர்கள் சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி கதாநாயகர்களுக்கு இணையாக கேட்க ஆரம்பித்து விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.

நகைச்சுவை நடிகர்களில் சிலர் கதாநாயகர்களாகவும் உயர்ந்து விட்டார்கள். வடிவேலு, படங்களில் பிஸியாக இருந்தபோது ஒரு நாள் சம்பளமாக ரூ.10 லட்சம் வரை வாங்குவதாக கூறப்பட்டது. கதாநாயகனான பிறகு சம்பளம் ரூ.5 கோடி ரூ.6 கோடி என்று உயர்ந்தது. தற்போது நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்து கதை நாயகனாக நடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.

முன்னணி கதாநாயகர்கள் படங்களுக்கு அவரை நகைச்சுவை வேடத்துக்கு ஒப்பந்தம் செய்ய அணுகும் தயாரிப்பாளர்கள் சம்பளத்தை கேட்டு பின்வாங்கி விடுகிறார்கள். சந்தானமும் கதாநாயகனாகி விட்டார். நகைச்சுவை வேடங்களில் நடித்தபோது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை வாங்கினார். கதாநாயகன் ஆனதும் அந்த தொகை உயர்ந்து இருக்கிறது.

விவேக் கதாநாயகனாகவும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.40 லட்சம்வரை வாங்குவதாக கூறப்படுகிறது. பரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வாங்குகிறார். ஒரு படத்துக்கு மொத்தமாக ரூ.50 லட்சம் கேட்கிறார். அடுத்து கதாநாயகனாக நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் பிரபலமாக உள்ள பிரம்மானந்தம் ஒரு நாள் சம்பளமாக ரூ.1 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் இவர்தான். முன்னணி காமெடியன்கள் கதாநாயகர்களாகி ஒதுங்கியதால் புதிதாக வந்துள்ள நகைச்சுவை நடிகர்கள் காட்டில் அடைமழை. சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளனர். அனைவரும் ஒரு நாள் ஊதியமாக நிர்ணயித்து வாங்குகிறார்கள்.

யோகி பாபு ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். அவர் கைவசம் 20 படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய நகைச்சுவை நடிகர்களில் அதிகம் சம்பாதிப்பவர் இவர்தான். யோகிபாபு நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது. ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோர் ஒரு நாள் சம்பளமாக தலா ரூ.1.50 லட்சமும், சதீஷ் ரூ.1 லட்சமும், எம்.எஸ்.பாஸ்கர் ரூ.1 லட்சமும் வாங்குகிறார்கள்.

கஞ்சா கருப்பு, வையாபுரி, சாம்ஸ், ரோபோ சங்கர் உள்பட அடுத்த கட்டத்தில் இருக்கும் காமெடியன்கள் ரூ.50 ஆயிரம் பெறுகிறார்கள். தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகைகள் பற்றாக்குறை உள்ளது. கோவை சரளா தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாங்குகிறார். 

Next Story