கண் சிமிட்டலில் இளைஞர்களை வீழ்த்திய நடிகைக்கு சிக்கல்?


கண் சிமிட்டலில் இளைஞர்களை வீழ்த்திய நடிகைக்கு சிக்கல்?
x
தினத்தந்தி 14 Feb 2018 11:45 PM GMT (Updated: 14 Feb 2018 10:29 PM GMT)

நடிகை பிரியா வாரியர், ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகை ஆகிவிட்டார்.

மலையாள திரையுலகில் ஒமர் லுலு இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த பாடல் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த பாடலை இதுவரை சுமார் 1½ கோடி பேர் யுடியூபில் பார்த்து உள்ளனர்.

இதற்கு காரணம், அந்த பாடலில் கண்ணால் பேசியும், வெட்கப்புன்னகை சிந்தியும் சிறப்பான நடிப்பை வழங்கிய இளம் நடிகை பிரியா வாரியர்.

பள்ளி மாணவியாக நடித்துள்ள அவர், தனது மனம் கவர்ந்த சக மாணவனிடம் புருவங்களை உயர்த்தியும், கண் சிமிட்டியும் தனது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தின் மற்றொரு டீசரில், அந்த மாணவனுக்கு நளினமாக பறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருக்கிறது.

கேரள அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ள பிரியா வாரியர், இந்த பாடலால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகை ஆகிவிட்டார்.

இந்த பாடலை பதிவேற்றிய 24 மணி நேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் 6 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்று இருக்கிறது. இணையதளத்தில் தேடப்படுவோர் பட்டியலில் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் போன்றோரை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரியா வாரியர் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இந்த பாடல் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள பிரியா வாரியர், ஒரே பாடலில் தேசிய அளவில் பிரபலமாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். தன்மீது ரசிகர்கள் காட்டும் அன்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றும் அவர் வெளியிட்டு உள்ளார்.

இவ்வாறு பாடலுக்கு ஆதரவும், மகிழ்ச்சியும் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், இந்த பாடல் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி ஐதராபாத்தின் பரூக்நகரை சேர்ந்த சில இளைஞர்கள் பலக்னுமா போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி படத்தின் இயக்குனர் ஒமர் லுலு மீது இந்திய தண்டனை சட்டம் 295 ஏ (மதம் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்தல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கள் புகார் மனுவில் பிரியா வாரியரின் பெயரை குறிப்பிடவில்லை என அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். எனினும் அந்த பாடலை எழுதியவர், இசையமைத்தவர் மற்றும் அதில் நடித்தவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. 

Next Story