சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பேன் - நித்யாமேனன்


சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பேன் - நித்யாமேனன்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:45 PM GMT (Updated: 20 Feb 2018 9:29 PM GMT)

ஓரின சேர்க்கை படத்தில் நடித்ததற்காக வருந்தவில்லை -நித்யா மேனன் கூறினார்.

தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, 180, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நித்யாமேனன், தெலுங்கு, மலையாள திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் தயாரான ஆ படத்தில் ஓரின சேர்க்கை கதாபாத்திரத்திலும் துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

இயக்குனர்கள் கதை சொல்லும்போது அதில் தலையிட்டு திரைக்கதையை மாற்றுவதாக நித்யாமேனன் மீது புகார்கள் வருகின்றன. இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் கதைகளில் தலையிடுவது உண்மைதான். என்னிடம் 200 பேர் கதை சொன்னால் 4, 5 கதைகளைத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். கதையும், கதாபாத்திரமும் புதிதாக இருக்க வேண்டும். வழக்கமான படங்களில் நடிப்பது இல்லை. கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அவற்றில் கண்டிப்பாக தலையிட்டு மாற்றங்கள் செய்ய சொல்கிறேன்.

எனக்கு தெரிந்த விஷயங்களை தெரிவிப்பேன். அதுபோல் வசனத்திலும் தலையிடுவேன். நிறைய வசனங்கள் நான் சொல்லிக்கொடுத்ததாகத்தான் இருக்கும். அப்படி தலையிடுவது தவறு அல்ல என்பது எனது கருத்து. எதிர்காலத்தில் நான் டைரக்டராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தயாரிப்பாளர் ஆக மாட்டேன். காரணம் புதுமையாக, வித்தியாசமாக என்னால் யோசிக்க முடியும். ஆனால் வரவு-செலவு கணக்குகள் பார்க்க தெரியாது. நித்யா மேனன் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில்தான் நடிப்பார் என்ற முத்திரை என்மீது விழுவது எனக்கு பிடிக்காது. அதனால்தான் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.

என்னை தேடிவரும் டைரக்டர்கள் கூட நல்ல கதைகளைத்தான் கொண்டு வருகிறார்கள். மெர்சல் போன்ற சில படங்களில் வயதுக்கு மிஞ்சிய கதாபாத்திரங்களில் நான் நடித்து இருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. கதை பிடித்தால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க தயங்க மாட்டேன். லெஸ்பியன் படத்தில் நடித்ததற்காகவும் வருத்தப்படவில்லை.

இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

Next Story