மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா


மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
x
தினத்தந்தி 24 Feb 2018 11:00 PM GMT (Updated: 24 Feb 2018 7:06 PM GMT)

பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்காவில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சி தொடரான ‘குவாண்டிகோ’வின் 3-வது சீசனில் நடித்து வரும் அவரிடம், 2 ஹாலிவுட் படங்களும் கைவசம் உள்ளன.

குவாண்டிகோ படப்பிடிப்பில் ஓய்வின்றி நடித்து வரும் பிரியங்கா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார். அதில் ஒரு கண்ணாடி டம்ளரில் மது குடித்துவிட்டு, பின்னர் அந்த டம்ளரை தனது தலையில் அடித்து உடைப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.

அந்த வீடியோ பதிவுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், ‘நீங்கள் ஓய்வின்றி பணியாற்றினால் இதுதான் நடக்கும்... இதை வீட்டில் முயற்சிக்காதீர்கள். ஒரு மோசமான நாளுக்குப்பிறகு நான் இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்தேன். ஓ.கே., ஓ.கே. நான் நிறுத்திக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

பிரியங்காவின் இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ‘மோசமான நாள்’ என்று அவர் குறிப்பிட்டு இருந்ததால் குவாண்டிகோ படப்பிடிப்பில் அவருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பிரியங்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். அந்த மாநில நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் அசாம் சுற்றுலாத்துறை வெளியிட்ட காலண்டர் படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார்.

இதில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரசார், பிரியங்காவின் புகைப்படம் மாநில கலாசாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர். எனவே அவரை நல்லெண்ண தூதர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story