கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை நடிகை கவுதமி தகவல்


கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை நடிகை கவுதமி தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2018 9:45 PM GMT (Updated: 25 Feb 2018 8:55 PM GMT)

அவர் எனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார் நடிகை கவுதமி.

சென்னை,

“நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார்” என்று நடிகை கவுதமி கூறினார்.

இதுகுறித்து நடிகை கவுதமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“கமல்ஹாசனுடன் நான் இணைந்து செயல்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது அதிர்ச்சியாக உள்ளது. அந்த தகவல்கள் தவறானவை. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் பிரிந்து விட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் பிரிவதற்கு வலுவான காரணமும் இருக்கிறது.

அவருடன் உறவை முறித்துக்கொண்ட பிறகு சுயமான முறையில்தான் எனது வாழ்க்கையும், செயல்பாடுகளும் உள்ளன. கமல்ஹாசனுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில், நிறுவனம் சார்ந்தோ நான் இயங்கவில்லை. எனது மகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டுகிறேன். பதற்றமான சூழ்நிலையில் இருந்து விலகி சுதந்திரமாக இருக்கிறேன்.

எனக்காகவும், எனது மகளுக்காகவும் வருமானத்தை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினேன். வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். அதன்மூலம் எனக்கு வருமானம் வந்தது.

கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம், விஸ்வரூபம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. அந்த பணம் எனது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. சம்பள பாக்கியை வசூலிக்க பல முறை முயன்றும் கிடைக்கவில்லை.

எனக்கும், கமல்ஹாசனுக்கும் உள்ள உறவு முறிந்ததற்கு சுருதிஹாசன் காரணம் என்பதில் உண்மை இல்லை. கமல்ஹாசனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோது பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டேன். இப்போது தனியாகத்தான் எனது வாழ்க்கையை நகர்த்துகிறேன்.” இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.

சம்பள பாக்கி வைத்து இருப்பதாக கவுதமி கூறியுள்ள புகாரை கமல்ஹாசன் பட நிறுவனம் மறுத்து உள்ளது. ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்றியதற்காக கவுதமிக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், தசாவதாரம் நாங்கள் தயாரித்த படம் அல்ல என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.

Next Story