‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்


‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்
x
தினத்தந்தி 28 Feb 2018 12:15 AM GMT (Updated: 28 Feb 2018 5:38 AM GMT)

நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

னவு கன்னிகளாக கோலோச்சிய சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது சாவுகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

ஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா. பின்னர் டைரக்டர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து திரையுலகை அதிர வைத்தார்.

நடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது. 1990-ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தனது 19-வது வயதில் மர்மமாக இறந்துபோனார். நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் செத்துப்போனதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

திவ்யபாரதி தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? தவறி விழுந்து இறந்தாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று வழக்கை முடித்தனர்.

கங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர் விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார். 2000-ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக கூறப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால் கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996-ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் உயிரை விட்டதாக கூறப்பட்டது. மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர் படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும் பிரபலம். முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம் குடித்து இறந்தார்.

நகைச்சுவை நடிகை சோபனா மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்தார்.

நடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில் தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள். 

Next Story