9-வது நாளாக நீடிக்கும் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.10 கோடி நஷ்டம்


9-வது நாளாக நீடிக்கும் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.10 கோடி நஷ்டம்
x
தினத்தந்தி 9 March 2018 10:45 PM GMT (Updated: 9 March 2018 10:34 PM GMT)

பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.10 கோடி நஷ்டம் சினிமா படப்பிடிப்புகளை ரத்து செய்ய ஆலோசனை நடக்கிறது.


தியேட்டர்களில் படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, அதை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இருதரப்பினருக்கும் பல கட்டங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்டன. இதனால் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நேற்று 9-வது நாளாக நீடித்தது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பெரிய மற்றும் சிறிய பட்ஜெட்டில் தயாரான ஐந்து அல்லது 6 புதிய படங்கள் திரைக்கு வருவது வழக்கம்.

ஆனால் கடந்த வாரமும் நேற்றும் படங்கள் வெளியாகவில்லை. தாராவி படம் மட்டும் தடையை மீறி வெளிவந்தது. தற்போது தியேட்டர்களில் திரையிட புதிய படங்கள் இல்லாததால் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களையும் விஜய், அஜித்குமார் ஆகியோர் நடித்துள்ள மெர்சல், வீரம் மற்றும் பாகுபலி படங்களையும் மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் ஜீவாவின் கலகலப்பு-2 விமலின் மன்னர் வகையறா, ஜோதிகாவின் நாச்சியார் உள்ளிட்ட சில படங்களை தொடர்ந்து திரையிட்டு வருகிறார்கள். புதிய படங்கள் வெளியாகாததால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது என்றும் சில தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு 10 அல்லது 12 பேர் மட்டுமே வருவதால் 3 காட்சிகளை ரத்து செய்து வருகிறோம் என்றும் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். 9 நாள் வேலை நிறுத்தத்தில் ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்வது குறித்து பட அதிபர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தியேட்டர் அதிபர்களும் கேளிக்கை வரியை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல் திரையரங்குகளை மூடப்போவதாக அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலகம் மொத்தமாக முடங்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

Next Story