நடிகைகளை ராணி மாதிரி பார்க்கிறார்கள் -அனுஷ்கா மகிழ்ச்சி


நடிகைகளை ராணி மாதிரி பார்க்கிறார்கள் -அனுஷ்கா மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 March 2018 11:30 PM GMT (Updated: 9 March 2018 11:14 PM GMT)

நடிகைகளை ராணி மாதிரி பார்க்கிறார்கள் என அனுஷ்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகியும் அவரது மார்க்கெட் சரியவில்லை. கதாநாயகியாகவே இன்னும் நீடிக்கிறார். இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, பாகுமதி, ஓம் நமோவெங்கடேசாயா என்று சமீபத்தில் வந்த படங்கள் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்.

சினிமா அனுபவங்கள் குறித்து அனுஷ்கா சொல்கிறார்:-

“சினிமாவில் நடிப்பதும் ஒரு உத்தியோகம்தான். அரசு துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்வதுபோல்தான் இங்கேயும் நாங்கள் வேலை பார்க்கிறோம். ஆனால் மற்றவர்களை விட நாங்கள் பார்ப்பது மிகச்சிறந்த வேலை. சினிமாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள எல்லோராலும் நேசிக்கப்படும் சினிமா துறையில் நான் ஒரு நடிகையாக இருப்பது பெருமையாக இருக்கிறது.

சம்பளம் மட்டுமன்றி நிறைய சவுகரியங்களையும் இங்கு அனுபவிக்கிறேன். எல்லா தொழில்களிலுமே கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது. நடிகர்-நடிகைகளுக்கும் அது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு நிலைக்கு உயர்ந்து விட்டால் நடிகைகளை ராணி மாதிரி பார்ப்பார்கள். எங்கள் பேச்சுக்கும் மதிப்பு இருக்கும்.

நாங்கள் என்ன சொல்கிறோம் என்று கவனமாக கேட்பார்கள். சாதாரணமானவர்கள் சொல்வதை விட நாங்கள் சொல்வதை கேட்டு அதை பின்பற்றவும் தயாராக இருக்கிறார்கள். வேலைக்கு செல்கிறவர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை உழைத்து சோர்ந்து போகிறார்கள். ஆனால் சினிமாவில் நாங்கள் 24 மணி நேரமும் அரங்குகளுக்குள் முடங்கி நடித்தாலும் சோர்வு ஏற்படாது. அப்படி ஒரு இஷ்டமான தொழில்தான் சினிமா. இதைவிட சிறந்த வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Next Story