மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கு - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு பிடிவாரண்டு ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவு


மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கு - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு பிடிவாரண்டு ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 March 2018 10:15 PM GMT (Updated: 10 March 2018 8:27 PM GMT)

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆலந்தூர் கோர்ட்டுஉத்தரவிட்டது.

ஆலந்தூர்,

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் ஜேம்ஸ் வசந்தன். பிரபல இசையமைப்பாளர். இவருடைய மனைவி சுகந்தி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.

அதில், வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தன், தன்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவதாக கூறி இருந்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை நகலை பெற நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கை வருகிற ஏப்ரல் மாதம் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story