திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர் “சாவித்திரியாக நடிப்பது அதிர்ஷ்டம்” -கீர்த்தி சுரேஷ்


திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர் “சாவித்திரியாக நடிப்பது அதிர்ஷ்டம்” -கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 12 March 2018 11:30 PM GMT (Updated: 12 March 2018 5:54 PM GMT)

சாவித்திரி வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.

கீர்த்தி சுரேஷ் கைவசம் அதிக படங்கள் உள்ளன. சினிமாவுக்கு வந்து சில நாட்களிலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துவிட்டார். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் சாமி-2 படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மீண்டும் விஜய் ஜோடியாகவும் நடிக்கிறார்.

விஷாலுடன் சண்டக்கோழி இரண்டாம் பாகம், சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் தயாராகும் நடிகையர் திலகம் படத்திலும், தெலுங்கில் உருவாகும் மகாநதி படத்திலும் சாவித்திரி வேடத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி கீர்த்தி சுரேஷ் சொல்கிறார்:-

“எனது சினிமா பயணம் அற்புதமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு போக வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு திறமை இருந்தாலும் உழைப்பு இருந்தாலும் கடைசியாக அதிர்ஷ்டம் முக்கியம். அதுதான் ஒருவரை உயரத்துக்கு கொண்டு செல்லும்.

சினிமாவில் எவ்வளவோ திறமைசாலிகள் ஜொலிக்காமல் போய் விட்டார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததே காரணம். நான் எந்த இடத்தில் இருக்கிறேன். எவ்வளவு வளர்ந்து இருக்கிறேன் என்று கணக்கு போட மாட்டேன். கிடைக்கிற வாய்ப்புகளை முழு கவனம் செலுத்தி நல்லபடியாக செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும் அக்கறை காட்டுவது இல்லை. கிடைக்கிற கதாபாத்திரங்களில் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். எனக்கு நல்ல கதாபாத்திரங்களே அமைகின்றன. சில மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை சாவித்திரி படம் நிறைவேற்றி இருக்கிறது. திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்தவர் சாவித்திரி. அவரது வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார். 

Next Story