“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
நிறைய பேய் படங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
கற்றது தமிழ் படத்தில் அறிமுகமாகி அங்காடி தெருவில் பிரபலமானவர் அஞ்சலி. எங்கேயும் எப்போதும், மங்காத்தா, அரவாண், கலகலப்பு, சேட்டை, சகலகலா வல்லவன், தரமணி, பலூன் ஆகியவையும் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் காளி படத்தில் நடித்து வருகிறார். அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:-
“தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் அமைகின்றன. ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைக்கிறது. பேய் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
ஏற்கனவே தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி என்ற பேய் படத்தில் நடித்து இருக்கிறேன். அதில் எனக்கு இரண்டு வேடம். ஒரு கதாபாத்திரத்தில் பேயாக வந்து ரசிகர்களை பயமுறுத்தினேன். அந்த படம் நன்றாக ஓடியது. எனக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. இன்றைய தலைமுறையினர் திகில் படங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
எனக்கு நிறைய பேய் படங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது. கீதாஞ்சலி பேய் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடக்கிறது. அந்த படத்திலும் நான் பேயாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.”
இவ்வாறு அஞ்சலி கூறினார்.
Related Tags :
Next Story