“உதயநிதிக்கு தேசிய விருது கிடைக்கும்” - டைரக்டர் சீனுராமசாமி


“உதயநிதிக்கு தேசிய விருது கிடைக்கும்” - டைரக்டர் சீனுராமசாமி
x
தினத்தந்தி 20 March 2018 9:35 AM GMT (Updated: 20 March 2018 9:35 AM GMT)

உதயநிதிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று டைரக்டர் சீனுராமசாமி கூறினார்.

தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை டைரக்டு செய்தவர், சீனுராமசாமி. இவர் இப்போது, ‘கண்ணே கலைமானே’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில், உதயநிதி ஸ்டாலின்-தமன்னா ஜோடியாக நடித்து வந்தார்கள். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

உதயநிதி-தமன்னா ஜோடியுடன் வசுந்தரா, வடிவுக்கரசி, ‘பூ’ ராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து வந்தது. தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. படத்தை பற்றி டைரக்டர் சீனுராமசாமி சொல்கிறார்:-

“உதயநிதிக்கு, ‘கண்ணே கலைமானே’ படம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில்அமைந்து இருக்கிறது. இந்த படத்தில் அவர், இயற்கை விவசாயியாக நடித்து இருக்கிறார். அவருடைய உழைப்பை பற்றி சொல்வது என்றால், “உண்மையான படத்துக்கு நேர்மையான அர்ப்பணிப்பு” என்று ஒரு வரியில் சொல்லி விடலாம்.

படத்தில் அவர், மண்புழு உர உற்பத்தியாளராக வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் அவர் மிக யதார்த்தமாக நடித்து இருக்கிறார். அவருக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். இதுவரை எடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்த உதயநிதி, “நான் சிரித்தேன்...உருகினேன்...கற்றுக்கொண்டேன்” என்று பாராட்டினார். தமன்னா, வங்கி அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சொந்த குரலில், ‘டப்பிங்’ பேச இருக்கிறார்.” 

Next Story