கார்த்திக் நரேனுடன் மோதல் “படத்தில் இருந்து வெளியேற தயார் -டைரக்டர் கவுதம் மேனன் பதிலடி


கார்த்திக் நரேனுடன் மோதல் “படத்தில் இருந்து வெளியேற தயார் -டைரக்டர் கவுதம் மேனன் பதிலடி
x
தினத்தந்தி 29 March 2018 10:45 PM GMT (Updated: 29 March 2018 7:22 PM GMT)

கார்த்திக் நரேன் குற்றச்சாட்டுக்கு டைரக்டர் கவுதம் மேனன் பதிலடி கொடுத்துள்ளார்.

அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். டைரக்டர் கவுதம் மேனன் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதால் பட வேலைகள் முடங்கியதாக புகார் எழுந்தது. படக்குழுவினரை குப்பையை போல் நடத்தியதாக கவுதம் மேனன் மீது கார்த்திக் நரேன் சாடினார். தயவு செய்து இனிமேல் யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள் என்றும் கூறியிருந்தார்.

கார்த்திக் நரேன் குற்றச்சாட்டுக்கு கவுதம் மேனன் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

“கார்த்திக் நரேன் கருத்து எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. பதிலுக்கு நானும் கருத்து பதிவிட்டது தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நரகாசுரன் திரைக்கதை விஷயத்தில் நான் தலையிட்டது இல்லை. கார்த்திக் நரேன் கேட்டதை கொடுக்க சொன்னேன். அவருக்கு முழு சுதந்திரம் வழங்கினேன். அதிக சம்பளம் கொடுத்து அவர் கேட்ட நடிகர்களை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தோம்.

படத்தின் பின்னணி இசையை கார்த்திக் நரேன் மெசிடோனியாவில் உருவாக்க ஏற்பாடு செய்து கொடுத்தோம். துருவ நட்சத்திரம் படத்துக்கு பணத்தை திருப்பி விடும் அளவு வியாபாரம் பெரியது அல்ல. நரகாசுரன் லாபத்தில் 50 சதவீதத்தை நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்பதும் தெரியும்.

நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். அதன் பிறகு படம் என்னுடையது அல்ல. சிலர் பேச்சை கேட்டு கார்த்திக்குக்கு கோபம் வந்துள்ளது. படம் வெளியாவதை யாரும் தடுக்க முடியாது. பரணில் வைப்பதற்காக நான் படம் எடுக்கவில்லை.

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நான் தலையிடவில்லை. பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படும் துருவநட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகும். நரகாசுரன் பட பிரச்சினைகள் தீர்க்கப்படும்.”

இவ்வாறு கவுதம் மேனன் கூறியுள்ளார். 

Next Story