“இனிமேல் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” -நடிகை சார்மி


“இனிமேல் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்” -நடிகை சார்மி
x
தினத்தந்தி 29 March 2018 11:00 PM GMT (Updated: 29 March 2018 7:29 PM GMT)

தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

தமிழில் ‘காதல் அழிவதில்லை’ ‘லாடம்’ ‘10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்துள்ள சார்மி, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சார்மி அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“என் வாழ்க்கையில் ஒருவரை ஆழமாக காதலித்தேன். 2 விஷயங்களால் அந்த காதல் முறிந்துவிட்டது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் அதே காரணங்களுக்காக பிரிய வேண்டி வந்திருக்கும். அவரது நடவடிக்கையால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பு வந்துவிட்டது. காதல் மற்றும் திருமணம் மீதான நம்பிக்கையும் போய் விட்டது. ஆனாலும் அவர் நல்லவர்தான்.

இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது, அவருக்காக காத்திருப்பது, நேரம் ஒதுக்குவது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என்பது எல்லாம் என்னால் முடியாது. எனவே இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை காதலித்து ஏமாற்றியவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.

இவ்வாறு சார்மி உருக்கமாக கூறினார். அவரது முடிவு தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்மியை காதலித்து ஏமாற்றியவர் யார்? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே சார்மியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்பட்டது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள் என்றும் தகவல்கள் வந்தன. அதனை இருவரும் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

எனவே தேவி ஸ்ரீ பிரசாத்தை சார்மி குற்றம் சாட்டுகிறாரோ? என்ற பேச்சு பரவலாக அடிப்படுகிறது. 

Next Story