சினிமா தொழிலை கேவலமாக பேசுவதா? - காஜல் அகர்வால் ஆவேசம்


சினிமா தொழிலை கேவலமாக பேசுவதா? - காஜல் அகர்வால் ஆவேசம்
x
தினத்தந்தி 2 April 2018 11:15 PM GMT (Updated: 2 April 2018 11:10 PM GMT)

சினிமா தொழிலை கேவலமாக பேசுவதா என காஜல் அகர்வால் ஆவேசமாக பதில் அளித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். அவரது படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. பட வாய்ப்புகளும் குவிகிறது. சினிமா அனுபவம் பற்றி காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் 10 வருடங்களாக நடித்துக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு உயரத்துக்கு வருவேன் என்று நடிகையான புதிதில் நினைத்து பார்க்கவில்லை. இந்த இடம் எளிதாக கிடைத்து விடவில்லை. இதன் பின்னணியில் எனது உழைப்பும் திறமையும் இருக்கிறது. கடவுள் ஆசிர்வாதமும் உள்ளது. அதோடு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால்தான் நிலைத்து இருக்கிறேன்.

நடிகையாக இருப்பதை பாதுகாப்பு இல்லாததுபோல் உணர்கிறீர்களா? என்று பலர் கேட்கிறார்கள். என்னை பெற்றோர்கள் தைரியமாக வளர்த்து உள்ளனர். எதற்கும் பயப்பட மாட்டேன். ஆனாலும் நடிகைகளுக்கு பொது இடங்களில் சில நேரங்களில் அசவுகரியங்களும் ஏற்பட்டு விடுகின்றன. நாங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த உழைக்கிறோம். எங்கள் உணர்வுகளை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிகைகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. ஆனாலும் அவர்களால் பொது இடத்தில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெயர் புகழுக்காக சுதந்திரத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது.

எனக்கு எதிரான விமர்சனங்களை நான் கண்டு கொள்வது இல்லை. அவர் களுக்கு பதில் சொல்லி மோத விரும்ப மாட்டேன். சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் எனது வாழ்க்கை சிறிய உலகத்துக்குள் அடங்கி இருக்கும். நடிகையானதால் உலக அளவில் பெரிய அறிமுகம் கிடைத்து இருக்கிறது. சிலர் சினிமா தொழிலை கேவலமாக பேசுகிறார்கள். எல்லா துறையிலும் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. கெட்ட நோக்கில் பார்ப்பவர்களுக்கு கெட்டது தான் தெரியும். நான் சினிமா துறையை மதிக்கிறேன். தினமும் யோகா-தியானம் செய்து மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறேன்.” என காஜல் அகர்வால் கூறினார்.

Next Story