எனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது - நடிகை அனுஷ்கா


எனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது - நடிகை அனுஷ்கா
x
தினத்தந்தி 4 April 2018 11:15 PM GMT (Updated: 4 April 2018 8:16 PM GMT)

எனக்கு தனிமையில் இருக்கவே பிடிக்கிறது என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா, இப்போது மலையாளத்துக்கு போய் இருக்கிறார். அங்கு மம்முட்டி ஜோடியாக நடிக்கிறார். நீண்ட நாட்களாக மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறதாம். இதில் மம்முட்டி சிறை கைதியாக வருகிறார்.

அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவியது. இதனை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் அதில் நடிக்க வேண்டாம் என்று பிரபாஸ் தடுத்து விட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. இதன் மூலம் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது என்று கிசுகிசுக்கின்றனர். அனுஷ்கா தனிமை விரும்பியாக இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“ஒவ்வொரு துறையில் இருப்பவர்களுக்கும் தங்கள் ஓய்வை எப்படி செலவிடுவது என்ற திட்டம் இருக்கும். சிலர் குடும்பத்தோடு இருக்கவும் இன்னும் சிலர் நண்பர்களுடன் வெளி இடங்களை சுற்றி பார்க்க செல்லவும் விரும்புவார்கள். எனக்கு ஓய்வு கிடைத்தால் தனிமையில் இருந்துதான் கழிப்பேன். ஓய்வு கிடைக்கும்போது வேறு வேலைகள் வைத்துக்கொள்ள மாட்டேன்.

படப்பிடிப்புகளில் நம்மை பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. 24 மணிநேரமும் கதாபாத்திரமாகத்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்போது தனியாக உட்கார்ந்து என்மேல் கவனம் செலுத்துவேன். எனக்குள்ளேயே பேசிக்கொள்வேன். நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குள்ளே நினைவு படுத்தி பார்ப்பேன். தனிமையில் இருந்து என்னை பற்றி சிந்திப்பதன் மூலம் என்ன தவறு செய்தோம் என்று உணரவும் அதை திருத்திக் கொள்ளவும் வழி கிடைக்கும்” என அனுஷ்கா கூறினார்.

Next Story