படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் செல்லும் ஷாருக்கான்


படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் செல்லும் ஷாருக்கான்
x
தினத்தந்தி 5 April 2018 11:30 PM GMT (Updated: 5 April 2018 10:18 PM GMT)

படப்பிடிப்புக்கு ஷாருக்கான் தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார்.


இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்ஷா, கிங்காங் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் விழாக்களுக்கு வரும் பிரபலங்களை வரவேற்று இருக்கையில் அமர வைக்கும் வேலை பார்த்து தினமும் ரூ.50 சம்பளம் பெற்ற அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.45 கோடி வாங்குகிறார்.

ஷாருக்கான் நடித்து கடைசியாக வந்த ‘ஜப் ஹாரிமெட் செஜால்’ படம் வெற்றி பெறவில்லை. இதனால் தனது அடுத்த படமான ‘ஜீரோ’வை வெற்றி படமாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அவர் குள்ள மனிதராக நடிக்கிறார். இதில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இரவு நேரத்தில்தான் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு படப்பிடிப்பை தொடங்கி மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முடிக்கின்றனர். படப்பிடிப்புக்கு ஷாருக்கான் தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார்.

மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே ஷாருக்கான் ஹெலிகாப்டரில் வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கமல்ஹாசன் நடித்த ‘ஹேராம்’ படத்தின் உரிமையை ஷாருக்கான் வாங்கி இருக்கிறார். இந்த படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்து அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story