சார்லி சாப்ளினின் சிறந்த படைப்பு..!


சார்லி சாப்ளினின் சிறந்த படைப்பு..!
x
தினத்தந்தி 7 April 2018 7:54 AM GMT (Updated: 7 April 2018 7:54 AM GMT)

நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் நடித்த படங்கள் அனைத்துமே ‘மெகா ஹிட்’ அடித்தன.

சார்லி சாப்ளின் முதல் படமான ‘தி கிட்’ திரைப்படம் நகைச்சுவை கலாட்டாவிற்கு கேரண்டி கொடுக்கும் படம். அதுமட்டுமின்றி, காட்சிகளில் ஆங்காங்கே இடம் பிடிக்கும் சமூக கருத்துகள் கண்களை நனைத்துவிடும். சாலையில் கண்டெடுக்கும் ஒரு குழந்தையை சார்லி சாப்ளின் எப்படி வளர்க்கிறார்?, அந்த குழந்தை வளர்ந்து சார்லி சாப்ளினுக்கு எப்படி உதவுகிறது? என்பதையே கதைக்களமாக அமைத்து நகைச்சுவை விருந்து படைத்திருப்பார்கள். அதை இங்கே பரிமாறுகிறோம். சிரித்து மகிழுங்கள்....

உடைந்த ஜன்னல் கண்ணாடிகளை சரிபடுத்தும் தொழிலைச் செய்கிறார் சாப்ளின். அந்தசமயத்தில் ஒரு குழந்தை சாலையோரத்தில் அனாதையாக கிடைக்கிறது. சார்லி அந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார். இந்த காட்சிகளே திரைப்படத்தின் சென்டிமென்ட் காட்சிகளாக அமைந்துவிடுகின்றன. சில காட்சிகளுக்கு பிறகு குழந்தை சிறுவனாக வளர்ந்துவிடுகிறான். சார்லி சாப்ளினுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறான். எப்படி தெரியுமா...? தெருத்தெருவாகச் செல்லும் சிறுவன், அங்கிருக்கும் ஜன்னல் கண்ணாடிகள் மீது கற்களை விட்டெறிந்து உடைப்பான். வீட்டுக்காரர்கள் வந்து பார்க்கும்முன் ஓடி ஒளிந்துவிடுவான். பின்னர் அவர்கள் எப்படி ஜன்னல்களை சரிசெய்வது என்று பார்க்கும்போது, சாப்ளின் தனது புதிய கண்ணாடிகளோடும், சில கருவிகளோடும் ஒன்றும் தெரியாதது போல வருவார், உண்மையான தொழில் காரரைப் போலவே. இப்படியே இவர்களது வாழ்க்கை கழிகிறது.

ஒருமுறை போலீஸ்காரர்களிடம் இவர்கள் மாட்டிக்கொள்ளவும் நேரிடுகிறது. ஆனால் போலீஸ்காரருக்கு இவர்கள் இருவரும் டேக்கா கொடுத்துவிட்டு தப்பித்துச் சென்றுவிடுவார்கள். படத்தில் சாப்ளின் தோன்றும் முதல் காட்சியே நம்மை நகைச்சுவையில் ஆழ்த்துகிறது. தெருவொன்றின் வழியே அவர் வந்துகொண்டிருக்கிறார். அப்போது ஓர் இடத்தில் மாடியிலிருந்து குப்பையை தரையில் யாரோ கொட்ட, அவர் மேலே மாடி ஜன்னலையும் கீழே குப்பைத்தொட்டியையும் மாறிமாறிப் பார்ப்பார். இதுமாதிரி இடங்களில் இவரது உடல்மொழி அருமை. கொஞ்சம் தூரத்தில் ஒரு குழந்தை தரையில் கிடக்கும். சட்டென ஒரு வீட்டின் ஜன்னல் மூடிவிடும். இந்த இரண்டையும் சம்பந்தப் படுத்தி ஜன்னலையும், குழந்தையையும் மாறிமாறி பார்க்கும் காட்சி, நகைச்சுவையின் உச்சம். அந்த குழந்தை தான் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் பலே கில்லாடி.

அந்த சிறுவன் ஒருநாள் தெருப் படிக்கட்டில் உட்கார்ந்திருப்பான். அப்போது இவனுடைய உண்மையான தாய் வருகிறாள். உண்மையில் இருவருக்கும் தாய்-மகன் என்ற உறவு தெரியாது. இவனுடைய தாய் தன் குழந்தையின் ஏக்கத்தில் பொம்மைகளை வாங்கி சாலையில் காணும் குழந்தைகளுக்கெல்லாம் தருவாள். அந்த வகையில்தான் இவனுக்கும் ஒரு பொம்மையைப் பரிசளித்துவிட்டுச் செல்கிறாள். அந்த பொம்மையை போக்கிரி ஒருவன் பறித்துக்கொண்டு ஓட, அவனைத் துரத்திச் சென்று சண்டையிட்டு அவனை வீழ்த்துவான். சின்னஞ்சிறு உருவம்கொண்ட சிறுவன் இளவயது போக்கிரியை அடித்து துவம்சம் செய்ததும் அந்தப் போக்கிரி, சிறுவனைவிட மிகப்பெரிய உடல்வாகு கொண்ட அவனுடைய அண்ணனை சண்டைக்கு அழைத்து வருவான். இம்முறை கோதாவில் இறங்குவது யார் தெரியுமா...? நம்ம நகைச்சுவை நாயகன் சார்லி. நோஞ்சான் போன்ற சாப்ளின் அந்த பலசாலியை தந்திரமாக வீழ்த்தும் காட்சிகள், நகைச்சுவை சிதறல்கள்.

இதைவிட சாப்ளின் கனவு காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். இப்படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் சாப்ளினின் கனவில் சிறகுகளோடு வருவார்கள். சாப்ளினுக்கும் சிறகுகள் உண்டு. அதைக் கொண்டு வானில் பறக்கத் தொடங்குவார். அந்தசமயம் அங்கு வரும் போலீஸ்காரர்கள், சாப்ளினை சுட்டு வீழ்த்திவிடுவார்கள். சாப்ளின் தொப்பென்று கீழேவிழுந்து விட போலீஸ்காரர் வந்து அவரை உலுக்குவார். போலீஸ்காரர் வந்து உலுக்குவது கனவில் அல்ல, உண்மைதான் என்பதை உணரும் சாப்ளின் மட்டுமல்ல படம் பார்ப்பவர்களும் விழிபிதுங்கி விடுவார்கள்.

இந்த படத்தில் சந்தோஷமாக நகரும் காட்சிகள், ஒருசில இடங்களில் கண்ணீரையும் வரவழைத்துவிடும். அதனால்தானோ என்னவோ..? படம் தொடங்கும்போதே ‘‘ஒரு திரைப்படம் சிரிப் போடும், கொஞ்சம் கண்ணீரோடும்’’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். சிரித்துசிரித்தும் கண்ணீர் வரும், இச் சிரிப்புக்குப் பின்னால் உள்ள சோகங்களை சிந்தித்தாலும் கண்ணீர்வரும் என்றுகூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு தொண்டு மருத்துவமனை காட்டப்படும். ஓர் இளம்தாய் குழந்தையோடு வெளியே வர காத்திருக் கிறாள். அவளுக்காக வாசல் திறந்துவிடப்படுகிறது. அவள் வெளியேறிய பிறகு மறுபடியும் கதவு மூடப்படுகிறது.

‘‘பாவத்தில் பிறந்த குழந்தை’’ என்ற பொருளில் மருத்துவமனையின் வாசலில் காவல் காக்கும் பெண் உடன் பணியாற்றும் ஒருவரிடம் கூறி ஏளனமாக சிரித்த படியே கேட்டுக்கு பூட்டு போடுவாள். அப்போதே அக் குழந்தை நம் இதயத்தில் ‘பச்சக்’ என்று உட்கார்ந்துகொள்கிறது. அவன் தான் ஜன்னல்களை உடைக்கும் சிறுவன். அவன் எப்படி தொலைந்து போகிறான் என்பதை கனமான காட்சிகளோடு காண்பித்திருப்பார், சாப்ளின்.

தொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் தாய் குழந்தையை முதலில் ஒரு காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறாள். அச்சமயம் திருடர்கள் வந்து காரை திருடி எடுத்துச் சென்றுவிடுவர். பின்னர் அந்த இளம்தாய் ஒரு பூங்காவில் அமர்ந்து மனம் திருந்தி குழந்தையை மீண்டும் காரில் இருந்து எடுத்துக்கொள்ள ஓடிவருகிறாள். ஆனால், அங்கு குழந்தையையும் காரையும் காணாமல் தவிக்கிறாள்.

மேலும் நீதிமன்றத்தில் குழந்தையைத் தேடிவரும் தாயை வினோதமாக சிறுவன் பார்க்கையில் தாயின் கண்கள் அன்பில் விரிகிறபோது நம் கண்களையும் அவை ஈரப்படுத்தி விடுகின்றன.

இப்படத்தில் ஆதரவற்ற சிறுவனாக நடித்த ஜாக்கி கூகனும், கைவிடப்பட்ட அபலைப் பெண்ணாக வரும் எட்னா பர்வியான்சும் பார்வையாளர்களின் இதயத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் அகலமாட்டார்கள்.

தனது அற்புத நடிப்பாற்றலால் மட்டுமல்ல கதை எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்து மவுனப்படத்தை இன்றுவரையிலும் பேசவைத்திருப்பவர் சார்லி சாப்ளின்தான். 1921-ல் அவர் இயக்கிய முதல் படமும் இதுவே. 1921-ல் வந்திருந்த ‘தி போர் ஹார்ஸ்மேன் ஆப் தி அப்போகாலிப்ஸ்' திரைப் படத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது இப்படம். மேலும் கலாசார, வரலாற்று அழகியல்மிக்க நினைவுச்சின்னம் இது என அமெரிக்க காங்கிரஸ் கூறியது. இத்திரைப் படத்தின் படச்சுருள்கள் அமெரிக்க அரசாங்கம் நிர்வகித்துவரும் தேசிய திரைப்பட பதிவுக்கழக நூலகத்திலும் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை என்பது யாரையும் புண் படுத்தாமல் ஒரு படி மேலே போய் சமூகம், வாழ்க்கை போன்ற பெரிய விஷயங்களுக்கு எளிய அர்த்தங்களைத் தர வேண்டும். அத்தகைய ஒரு சிறந்த திரைக்கதையின் உதாரணமாய் ‘தி கிட்' திகழ்ந்துகொண்டிருக்கிறது. 

Next Story