முழு ஒத்துழைப்பு கொடுப்போம் போராட்டத்தை மீறி, மெர்க்குரி படம் வெளிவராது - டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்


முழு ஒத்துழைப்பு கொடுப்போம் போராட்டத்தை மீறி, மெர்க்குரி படம் வெளிவராது - டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்
x
தினத்தந்தி 7 April 2018 11:00 PM GMT (Updated: 7 April 2018 9:42 PM GMT)

முழு ஒத்துழைப்பு கொடுப்போம் போராட்டத்தை மீறி, ‘மெர்க்குரி’ படம் வெளிவராது என டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.

சென்னை,

“தயாரிப்பாளர்களின் போராட்டத்தை மீறி, ‘மெர்க்குரி’ படம் வெளிவராது” என்றும், போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

புதிய படங்களை திரையிட, டிஜிட்டல் அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் ‘பெப்சி’ அமைப்பை சேர்ந்த தொழிலாளர்களும் ‘ஸ்டிரைக்’ செய்து வருகிறார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் கட்டுக்கோப்பாக-ஒற்றுமையுடன் நடத்தி வரும் இந்த வேலை நிறுத்த போராட்டம், திரையுலகின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் ‘மெர்க்குரி’ படத்தின் ‘டிரைலர்’ நேற்று முன்தினம் வெளியாவதாக இருந்தது. தயாரிப்பாளர்களின் போராட்டத்தை மீறி, ‘மெர்க்குரி’ படம் 13-ந்தேதி திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியானது.

இதையடுத்து கார்த்திக் சுப்புராஜுக்கு சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் சில தயாரிப்பாளர்கள், ‘மெர்க்குரி’ படத்தின் ‘ரிலீஸ்’ தேதியை தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘மெர்க்குரி’ படத்தின் டிரைலர் வெளியாவதை கார்த்திக் சுப்புராஜ் ரத்துசெய்தார். அத்துடன், தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அவர் அறிவித்தார். “தயாரிப்பாளர்களின் போராட்டத்துக்கு ‘மெர்க்குரி’ படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் போல் எங்களுக்கும் திரையுலகின் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்களின் போராட்டம் முடியும் வரை, ‘மெர்க்குரி’ படத்தின் தமிழ் பதிப்பு வெளிவராது” என்று அவர் கூறினார்.

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் ‘மெர்க்குரி’ படத்தில் பிரபுதேவா, இந்துஜா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இது, 4 பேருக்குள் நடக்கும் திகிலான கதையம்சம் கொண்ட படம். படத்தில் வசனங்கள் கிடையாது. கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்திருப்பதுடன், படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

Next Story