நான் கைதானதாக வதந்தி பரப்புவதா? நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம்
நான் கைதானதாக வதந்தி பரப்புவதா? என நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசம் அடைந்தார்.
சார்லி சாப்ளின் படம் மூலம் நடிகையான காயத்ரி ரகுராம், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார். டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அதன் பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கருத்துக்கள் பதிவிட்டு வந்தார்.
காயத்ரி ரகுராமை விமர்சித்து பலர் எதிர்கருத்துக்கள் பதிவிட்டனர். அவர்களுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. சமீபத்தில் தமிழ் பெண்ணான என்னை எதிர்க்கிறார்கள். கேரள பெண்ணை ஆதரிக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டார். நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் வதந்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இந்த வதந்திக்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் கைது செய்யப்பட்டதாக தவறான வதந்தி பரவி இருக்கிறது. கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் இருக்கிறேன். நான் பா.ஜனதா கட்சியில் இருக்கும் காரணத்தால் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள். எனக்கு குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். என்னை பற்றிய தவறான வதந்தி அவர்களையும் காயப்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதை செய்யவிடாது. மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நானும் நம்பிக்கையை இழந்து விட்டேன். இதனால் டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story