திரையுலகினரை களங்கப்படுத்தும் ஸ்ரீரெட்டி பெண்களை சப்ளை செய்ததாக என்மீது அவதூறு பரப்புவதா? - நடிகை ஜீவிதா ஆவேசம்


திரையுலகினரை களங்கப்படுத்தும் ஸ்ரீரெட்டி பெண்களை சப்ளை செய்ததாக என்மீது அவதூறு பரப்புவதா? - நடிகை ஜீவிதா ஆவேசம்
x
தினத்தந்தி 18 April 2018 10:30 PM GMT (Updated: 18 April 2018 6:58 PM GMT)

ஸ்ரீரெட்டி பெண்களை சப்ளை செய்ததாக என்மீது அவதூறு பரப்புவதா என நடிகை ஜீவிதா ஆவேசமடைந்தார்.


தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீவிதா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 1991-ல் நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சையில் ஜீவிதாவும் சிக்கி உள்ளார். ஸ்ரீரெட்டி மீதான பாலியல் புகார் குறித்து சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த டெலிவிஷன் விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய சமூக ஆர்வலர் சந்தியா, இளம்பெண்களை கட்டாயப்படுத்தி தனது கணவர் ராஜசேகரின் படுக்கைக்கு ஜீவிதா அனுப்பியதாக குற்றம் சாட்டினார். இது பட உலகில் பரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்து ஜீவிதா அளித்த பேட்டி வருமாறு:-

“என்மீது சந்தியா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. திரையுலகினரை இழிவாக நினைக்கும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன். யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்து செல்ல அவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. கதுவா சிறுமிக்கு நடந்தது என்னவென்று தெரியாத வயது. ஆனால் தற்போது தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது புகார் கூறும் பெண்கள் 20 வயதுக்கு மேற்பட்ட விவரம் தெரிந்தவர்கள்.

திரையுலகினரை ஸ்ரீரெட்டி களங்கப்படுத்துகிறார். பல ஆண்டுகளாக ஏமாறுவதற்கு அவர் குழந்தை இல்லை. ஸ்ரீரெட்டி ஒரு வீடியோவில் 24 மணிநேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக கூறியுள்ளார். இதைப் பார்த்த பிறகுமா? அவரது பேச்சை நம்புகிறீர்கள். நடிகர் ராணாவின் தம்பி முத்தமிடும் புகைப்படத்தில் பலவந்தம் தெரியவில்லை. இருவரும் விரும்பி முத்தமிட்டு இருக்கிறார்கள்.

மூத்த நடிகைகள் ஜெயப்பிரதா, ஜெயசுதா ஆகியோர் ஸ்ரீரெட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் யாரை நடிக்க வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று நினைக்கிறாரோ அவரைத்தான் நடிக்க வைப்பார்.” இவ்வாறு ஜீவிதா கூறினார்.

Next Story