‘ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல’ நடிகர் ஆனந்தராஜ் பேட்டி


‘ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல’ நடிகர் ஆனந்தராஜ் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2018 10:30 PM GMT (Updated: 19 April 2018 9:21 PM GMT)

பாரதிராஜா ஏதோ ஒரு காரணத்துக்காக ரஜினிகாந்தை குற்றம் சாட்டுகிறார் என்றும், ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறி உள்ளார். #AnandRaj

சென்னை,

பாரதிராஜா ஏதோ ஒரு காரணத்துக்காக ரஜினிகாந்தை குற்றம் சாட்டுகிறார் என்றும், ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறி உள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நடிகர் ஆனந்தராஜ் நேற்று காலை 9.30 மணிக்கு வந்தார். ரஜினிகாந்துடன் 1½ மணி நேரம் பேசிவிட்டு, காலை 11 மணிக்கு வெளியில் வந்த ஆனந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்துடன் நிறைய விஷயங்கள் பேசினேன். தற்கால நிகழ்வுகள், கருத்து போராட்டங்கள் குறித்து பேசினோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருடைய முடிவு.

அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். சுரப்பா நியமனம் இந்த நேரத்தில் தவறு என்று கூறும்போது, அவரை பா.ஜனதாவுக்கு எதிரானவர் என்று டாக்டர் தமிழிசை கூறுகிறார். பின்னர், ஒரு வன்முறை சம்பவத்தை கண்டிக்கும் போது, ரஜினிகாந்த் பா.ஜனதாவுக்கு ஆதரவானவர் என்கிறார்கள். ஆனால், அவர் தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் நல்ல அன்பு கொண்டவராகத்தான் இருக்கிறார்.

ரஜினியை, பாரதிராஜா உள்ளிட்டோர் ஏதோ ஒரு காரணத்துக்காக குற்றம் சாட்டுகிறார்கள். பாரதிராஜாவை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணும் போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கொடி பறக்குது’ என்று பெயர் வைத்தவர் அவர் தானே. ‘கொடி பறக்குது’ பெயர் உனக்கு சரியாகாதுன்னு சொல்லி, ‘பரதேசி’ (அதாவது இன்னொரு தேசத்தை சேர்ந்தவர்) என தலைப்பு வைத்திருக்கலாமே?

ரஜினியை அரசியலில் இருந்து பிரித்து பார்ப்பது சரியல்ல. அவர் எத்தனையோ தேர்தல்களில் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். பாரதிராஜா போன்றோர் எதை நோக்கி செல்கிறார்கள் என்று இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிய வரும்.

ரஜினிகாந்த் சினிமாத்துறையில் வெற்றி பெற்றது போன்று, அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சென்னையை பொறுத்தவரை தெலுங்கு வாக்குகள் அதிகம் உள்ள ஒரு மாவட்டம். அவர்களை ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல முடியாது.

கர்நாடகாவில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை பார்க்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். எந்த அரசு கர்நாடகாவில் இருந்து தண்ணீரை விட்டாலும், ரகசியமாக ராத்திரியில் தான் திறந்துவிடுவார்களே தவிர, தண்ணீர் திறந்துவிட போகிறோம் என்று சொல்லமுடியாது.

நம்மை ஆளப்போவது யார்? என்றால் மத்தியில் இருக்கும் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் தான். எனவே தமிழ் மொழி ஆர்வலர்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம், பிற மொழியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சிக்கு ஓட்டே போடாதீர்கள் என்று சொல்ல முடியுமா?

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் இப்போதும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன். தலைவராக அல்ல, தொண்டனாக இருந்து வருகிறேன். நடிகர் கமல்ஹாசனையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story