பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவாக கருத்து : எஸ்.வி.சேகர் பற்றி பாரதிராஜா கருத்து


பெண் பத்திரிகையாளர்கள் பற்றி  இழிவாக கருத்து : எஸ்.வி.சேகர் பற்றி பாரதிராஜா கருத்து
x
தினத்தந்தி 20 April 2018 10:30 PM GMT (Updated: 20 April 2018 7:05 PM GMT)

சினிமா பட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பேசினார்கள். #SVeShekher

சென்னை, 

சினிமா பட இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பேசினார்கள். பின்னர் இயக்குனர் பாரதிராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு கழகம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நடந்த பேரணி தொடர்பாக போலீஸ் கமிஷனரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். நாங்கள் நடத்திய அந்த பேரணியில் தெரிந்தோ, தெரியாமலோ சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டது. இனிமேல் அப்படி நடக்காது என்றும், வருங்காலத்தில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் போலீஸ் கமிஷனரிடம் பேசினேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பார்க்கும் போட்டியாகும். அது அரிதாக நடக்கிறது. கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தினோம்.

சினிமா தியேட்டரில் படம் பார்ப்பது தினந்தோறும் நடக்கும் ஒரு சிறிய நிகழ்வாகும். சினிமா படத்தையும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. இதுபற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாகும். எங்கள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விட்டுவிடலாம் என்று கமிஷனரிடம் கூறியிருக்கிறேன்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் இழிவாக கருத்து தெரிவித்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த பாரதிராஜா, ‘என் வீட்டு செல்ல நாய்க்குட்டிகளைக்கூட நான் பெயர் சொல்லி அழைப்பேன். ஆனால் எனக்கு உடன்பாடு இல்லாதவர்களின் பெயரைக்கூட நான் சொல்லமாட்டேன்’ என்று தெரிவித்தார்.

Next Story