கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? இந்தி பட உலகில் பரபரப்பு


கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? இந்தி பட உலகில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2018 11:24 PM GMT (Updated: 20 April 2018 11:24 PM GMT)

கணவருடன் ஐஸ்வர்யாராய் தகராறா? என இந்தி பட உலகில் பரபரப்பு நிலவுகிறது.

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யாராய். இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

அமிதாப்பச்சன் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். ரூ.6 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன. மற்ற கதாநாயகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் தாயும் பழம்பெரும் நடிகையுமான ஜெயாபச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் அடிக்கடி தகராறுகள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

மாமியாருடன் சண்டையால் ஐஸ்வர்யாராய் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று அதிக நாட்கள் அங்கு தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை. ஜெயாபச்சனின் 70-வது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கிசுகிசுத்தனர். அபிஷேக் பச்சன் சகோதரி ஸ்வேதா நந்தாவுடனும் மோதல் இருப்பதாக கூறினர்.

இந்த நிலையில் கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகித்து அவரது செல்போனை எடுத்து போன் நம்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை ஐஸ்வர்யாராய் ஆய்வு செய்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் கணவரை நான் சந்தேகப்படுவது இல்லை அவரது செல்போனை எடுத்து பார்ப்பதும் இல்லை என்று ஐஸ்வர்யாராய் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில்தான் இருவரும் ஒரே வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக வீடியோ தகவல் வெளிவந்துள்ளது.

Next Story